ஈரான் எண்ணெய் கப்பல் web
உலகம்

48 மணிநேர கெடு | ட்ரம்ப்க்குப் பணிந்த ஈரான்.. ஹார்முஸ் நீரிணை திறப்பு!

48 மணி நேரத்தில் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், எதிரிக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் நீரிணையை கடந்து செல்லலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

Premkumar S

ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடிவைத்த நிலையில், எதிரி கப்பல்களை தவிர மற்ற கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்துள்ளது. மேலும் நீரிணை வழியாகச் செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் - எல்பிஜி சிலிண்டர்

ஈரானின் இந்த நடவடிக்கையால் 1 பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விலை உயர்ந்திருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பை சரிசெய்ய ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. ஆனாலும், அதிகளவிலான எரிபொருள் தேவையின் காரணமாக இந்தியா, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில்தான், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வதற்கு அமெரிக்கா குறுகியகால அனுமதியை உலக நாடுகளுக்கு நேற்று வழங்கியது.

கடந்த காலங்களில் இந்தியாவின் முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடாக ஈரான் இருந்துவந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடையின் காரணமாக இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவைத்திருந்தது. அமெரிக்காவின் இந்த அனுமதியைத் தொடர்ந்து, இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஈரான் தரப்பில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எங்களிடம் கச்சா எண்ணெய் இல்லை என அமெரிக்காவின் அனுமதிக்கு பதிலளித்திருந்தது.

டிரம்ப்

இந்த சூழலில்தான், தனது சமூகவலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையென்றால், ஈரானின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அவ்வாறு, மின்சார உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ஈரான் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்லலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரானியப் பிரதிநிதி அலி மூசாவி கூறுகையில், ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்லலாம். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், வளைகுடாவில் மாலுமிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. அமைப்புடன் ஒத்துழைக்க தெஹ்ரான் எப்போதும் தயாராகவே இருக்கிறது.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

இருப்பினும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதற்கு ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களே காரணம். இந்த நீரிணை மூடுவது ஈரானின் ராஜதந்திரமாக இருந்தாலும், ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையும் அதைவிட முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், உலக நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.