Model image chat gpt
உலகம்

நம்பவைத்து ஏமாற்றிய ட்ரம்ப்.. காலை வாரிவிட்ட பாகிஸ்தான்.. நடுவில் சிக்கித் தவிக்கும் சவுதி!

நேரடி ராணுவ நடவடிக்கை இல்லை என்றாலும், ஹவுதிகளின் நகர்வுகள் மற்றும் இலக்குகள் குறித்த உளவுத் தகவல்களை சவுதிக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

Prakash J

போருக்கு மத்தியில், பாகிஸ்தானும், அமெரிக்காவும் ஒரேநேரத்தில், சவுதியைக் காலை வாரி விட்டிருப்பது மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ஆபா சர்வதேச விமான நிலையம், கிங் காலித் வான்படைத் தளம் மற்றும் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதுதான் பிரச்னையைத் தூண்டிவிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ஆபா சர்வதேச விமான நிலையம், கிங் காலித் வான்படைத் தளம் மற்றும் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். தவிர, ஏமனின் முக்கிய மோகா (Mokha) துறைமுகத்தைக் கைப்பற்றி, செங்கடலின் பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) ஜலசந்திப் பகுதியில் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில், இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புகள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு ஹவுதியும் பதிலடி கொடுத்தது. சவுதியின் முக்கிய நகரங்கள் மீது ஹவுதி அமைப்புகள் ஏவுகணைகளை ஏவியது.

khawaja asif

இந்த நிலையில்தான், ஏமனில் நிலவும் தாக்குதல் சம்பவம் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் பரவினால், மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் சார்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் தற்போது சவுதிக்கு நேரடி ராணுவ உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி இருக்கிறது.

இதையடுத்து, சவுதி அரேபியா அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உதவியை நாடியது. இருப்பினும், ஹவுதிகள் மீது நேரடியாக ராணுவத் தாக்குதல் நடத்தக் கோரிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். சவுதி இளவரசர், அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹவுதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தக் கோரினார். ஆனால், பிராந்தியத்தில் மற்றொரு போரை அமெரிக்கா விரும்பாததால் ட்ரம்ப் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

donald trump

நேரடி ராணுவ நடவடிக்கை இல்லை என்றாலும், ஹவுதிகளின் நகர்வுகள் மற்றும் இலக்குகள் குறித்த உளவுத் தகவல்களை சவுதிக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. செங்கடலில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதிலும், ஈரான் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவதிலுமே அமெரிக்கப் படைகள் முதன்மையாகச் செயல்படும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானை நம்பியிருந்த சவுதி அரேபியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது