அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து ஆண்டுதோறும் உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் (Ulchi Freedom Shield) என்ற மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்தாண்டுக்கான ராணுவப் பயிற்சி இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் சுமார் 18 ஆயிரம் தென்கொரிய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த ராணுவ கூட்டுப்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியை கணிசமான அளவில் குறைக்க உத்தரவிட்டிருப்பதாக ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நான் கொண்டுள்ள மிகச் சிறந்த உறவின் அடிப்படையில் பார்க்கையில், தென்கொரியாவுடன் ராணுவப்பயிற்சியை நடத்துவதில் தனக்கு நீண்ட காலமாகவே உடன்பாடில்லை.
மேலும், இந்தப் பயிற்சி அதிக செலவு பிடிக்கக்கூடியது மட்டுமல்லாமல், பெரும்பாலான செலவை அமெரிக்காவே ஏற்றுவருகிறது. எனவே, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேதிடம் (Pete Hegseth) கணிசமான அளவில் ராணுவப்பயிற்சியை குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஈரானை அணுஆயுத முயற்சியில் தங்களுடன் இணைய விருப்பமா? என தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் - இடம் (Lee Jae Myung) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியிருந்ததாகவும், ஆனால், அவர் மறுத்துவிட்ட நிலையில், அதற்கு பதிலடியாக ராணுவ குறைப்பு நடவடிக்கையை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், கிம் ஜாங் உன் உடனான தனது நல்லுறவை ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனினும், ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றதன் மூலம், ட்ரோன்கள், GPS இடையூறு மற்றும் சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட நவீன போர்த் தந்திரங்களில் அவர்களுக்கு அனுபவம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.