கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலின் ஆதரவோடு அமெரிக்கா படையெடுத்தது. ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதே நேரம் ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முடக்கிய நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுடன் கூடுதலாக, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் அல்லது உதவும் நாடுகளும் கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு மாகாணமாகக் குறிப்பிட்டு அதற்கான வரைபடம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் 18-ம் ட்ரம்ப் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை ஈரானின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டு ஈரான் தரப்பும் வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையை நீக்கும் வரை ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது எனத் எச்சரித்திருந்தார். இந்தச்சூழலில் தான், ஹார்முஸைக் குறிப்பிட்டு அமெரிக்காவின் புதிய பிரதேசம் (New US territory) எனக் குறிப்பிடும் வரைபடத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து அவரின் சமூகவலைதளப் பதிவில், ஹார்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கிறது எனவும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்களை அந்த ஹார்முஸ் வழியாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு, ஈரான் அமெரிக்கா இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், அமைதி ஒப்பத்தை எட்டுவது சிக்கல் நீடித்து வருகிறது.