ட்ரம்ப், நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

3 மாஸ்டர் ப்ளான்.. ஈரானுக்கு எதிராகச் செயல்படுத்த முடிவு.. விவாதித்த ட்ரம்ப், நெதன்யாகு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஈரானுக்கு எதிராக மெகா திட்டங்கள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியகி உள்ளது.

Prakash J

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுகள் எட்டப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக தாக்குதலை கைவிடும்படி அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதைத் தடுத்த அமெரிக்கப் படை, மறுபுறம் ஈரான் மீது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் வெள்ளைமாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் விவாதித்தது என்னவென்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கம், அதன் அணு ஆயுதத் திட்டம் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான கூட்டு உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆக்சியோஸ் தகவலின்படி, அவர்கள் இருவரும் விவாதித்தபோது மூன்று சாத்தியமான செயல் திட்டங்களை ஆராய்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. முதலாவதாக, பேச்சுவார்த்தை மூலம் ஈரானிடம் ஓர் உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைத் தடுக்கக்கூடிய ஓர் ஒப்பந்தத்திற்கு இறுதியில் ஒப்புக்கொள்ளுமா என்பது குறித்து நெதன்யாகு சந்தேகம் தெரிவித்தார். இரண்டாவதாக, ஈரானைச் சுற்றியுள்ள கடற்படை முற்றுகையைத் தொடர்வதோடு, கூடுதல் நடவடிக்கைகள் மூலம் பொருளாதார அழுத்தத்தையும் அதிகரிப்பது எனத் தெரிய வந்துள்ளது. மூன்றாவது செயல் திட்டமாக, ராஜதந்திரமும் தடைகளும் தோல்வியுற்றால், இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவிர, ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், 'ஆபிரகாம் உடன்படிக்கை'யை விரிவுபடுத்துவது மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பிற அரபு நாடுகளுடன் இஸ்ரேலின் தூதரக உறவை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது குறித்தும் பேசப்பட்டது. தொடர்ந்து, பிராந்தியத்தில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான எதிர்கால திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு தொடர்ந்து இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டது.