தொடரும் போர் | கச்சா எண்ணெய் விலை உயராதது ஏன்? காரணத்தைக் கண்டுபிடித்த வல்லுநர்கள்!
அமெரிக்கா - ஈரான் போர் தொடர்ந்து 5 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையிலும், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயராமல் கட்டுக்குள் இருப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானைத் தாக்கி வருகின்றன. அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுவது, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தவிர, மீண்டும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் நடவடிக்கைகளால் பொருளாதாரப் பிரச்னைகளும் சீர்குலைந்துள்ளது. எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் தொடர்ந்து 5 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையிலும், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயராமல் கட்டுக்குள் இருப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 150 முதல் 200 டாலர் வரை கடுமையாக உயரும்என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 126 டாலர் வரை மட்டுமே உயர்ந்துள்ளது. அதற்குமேல் அதிகரிக்கவில்லை. இதற்கு ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. உலகின் முன்னணி எண்ணெய் இறக்குமதியாளரான சீனா, மின்சார வாகனப் பயன்பாட்டை உயர்த்தியும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்தும் தேவையை மட்டுப்படுத்தியது. அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை வரலாறு காணாத அளவில் உயர்த்தியது.
ஏப்ரலில் ஒருநாளுக்கு 13 மில்லியன் பீப்பாய் என்ற அளவிற்கு உயர்த்தியது. அவசர சேமிப்பிலிருந்து 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை சந்தைக்குத் திறந்துவிட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் பெரிய அளவில் ஊக வணிகத்தில் ஈடுபடவில்லை. சவுதி அரேபியா தனது செங்கடல் துறைமுகம் வழியாக எண்ணெய் விநியோகத்தை அதிகரித்ததால் ஹார்முஸ் முடக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க உதவியது. தற்காலிக போர்நிறுத்தம் காரணமாக ஜூன் மாதத்தில், ஹார்முஸ் நீரிணைப் போக்குவரத்தும் சீரானது. சர்வதேசச் சந்தையில் உடனடிப் பயன்பாட்டுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தாராளமாக இருந்ததால் திடீர் விலை உயர்வு தவிர்க்கப்பட்டது.

