சிங்கப்பூர், எவரெஸ்ட் மசாலா
சிங்கப்பூர், எவரெஸ்ட் மசாலா ட்விட்டர்
உலகம்

பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

Prakash J

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் (Everest) ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை (Everest Fish Curry Masala) சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. இந்த நிலையில், எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எத்திலீன் ஆக்சைடு உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. நுண்ணுயிர் மாசுபாட்டைத் தடுக்க விவசாயப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின்கீழ், சாகுபடியின்போது மசாலாப் பொருட்களைக் கிருமிநீக்கம் செய்ய எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள பொருட்களை உட்கொள்வதால் உடனடி ஆபத்துகள் எதுவும் இல்லை.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

ஆனால், இது நீண்டகாலத்திற்கு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

மேலும் தகவலுக்கு நுகர்வோர் தங்கள் கொள்முதல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்” என அறிவுறுத்தியுள்ள சிங்கப்பூர் உணவு முகமை, எவரெஸ் மீன் மசாலா தயாரிப்புகளையும் உடனே திரும்பப் பெறுமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எனினும், சிங்கப்பூர் உணவு முகமையின் இந்த அறிவிப்புக்கு எவரெஸ்ட் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இதையும் படிக்க: பல்கலை மாணவி கத்தியால் குத்தி படுகொலை.. லவ் ஜிஹாத் பெயரில் அரசியல் அலை! கர்நாடகாவை பதறவைத்த சம்பவம்!