ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் பேட்டியில் கூறியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அனுமதி அளித்தாலும், அமெரிக்கா தங்கள் மண்ணில் கால் வைத்தால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடும் தரைவழித் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் 'மகுட வைரம்' என அழைக்கப்படும் கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா அதிரடியாகக் கைப்பற்றப் போகிறதா? 38 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் போட்ட திட்டம் இப்போது நிஜமாகிறதா? இதோ விரிவான தகவல்கள்
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றுவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், ஈரானின் எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்துவது அல்லது கார்க் தீவைக் கைப்பற்றுவது ஒரு முக்கிய வாய்ப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பதால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த ராணுவ மிரட்டல்களுக்கு மத்தியிலும் ஈரானுடன் மிக விரைவாக ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள பல முக்கிய ராணுவ இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை சிதைக்க வேண்டாம் என்று தான் தற்போதைக்கு முடிவு செய்துள்ளதாகக் கூறினார். ஒருவேளை ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
ஈரானின் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Qalibaf) ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி பாகிஸ்தான் கொடியேந்திய 10 கப்பல்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில், மேலும் 20 கப்பல்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், இதனை ஈரானிடமிருந்து தனக்குக் கிடைத்த ஒரு "பரிசு" என்று வர்ணித்துள்ளார்.
அதே சமயம், அமெரிக்கப் படைகள் தங்கள் மண்ணில் கால் வைத்தால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடுமையான தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
கார்க் தீவு மீதான டிரம்பின் இந்த ஆர்வம் தற்செயலானது அல்ல. கடந்த 1988-ஆம் ஆண்டிலேயே "கார்க் தீவை நாம் ஒரு கை பார்க்க வேண்டும்" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்த மோதல் போக்கினால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) போன்ற உலகத் தலைவர்கள் அவசர ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.