ரெசா பஹ்லவி, ஈரான், கமேனி எக்ஸ் தளம்
உலகம்

ஈரான் | இளவரசரால் வெடித்த போராட்டம்.. மீண்டும் நாடு திரும்ப முடியுமா? யார் இந்த ரெசா பஹ்லவி?

ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது.

Prakash J

ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது.

ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது. போராட்டக்காரர்கள், கடந்த காலத்தைப் போலல்லாமல், சீர்திருத்தத்தை மட்டும் நாடவில்லை, மாறாக இஸ்லாமிய குடியரசையே நிராகரிக்கின்றனர். அதனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1979 புரட்சியின்போது தூக்கியெறியப்பட்ட ஈரானின் கடைசி ஷாவின் மகன் ரெசா பஹ்லவி திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.

ஈரான், கமேனி

இதற்கிடையே, ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் அந்நாட்டின் 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான பெயர் ரெசா பஹ்லவி. இவர், ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா பஹ்லவியின் மூத்த மகனும் அந்நாட்டின் கடைசி இளவரசரும் ஆவார். 1925 முதல் 1979 வரை ஈரானை பஹ்லவி வம்சம் ஆட்சி செய்தது. ரெசா பஹ்லவியின் தந்தை மன்னராக இருந்தபோது ஈரான் பொருளாதார ரீதியாகவும், நவீனமயமாக்கலிலும் பெரும் வளர்ச்சி கண்டது. எனினும், 1979இல் ஏற்பட்ட புரட்சியால் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, இளவரசர் பஹ்லவி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்த 45 ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்தே ஈரானில் ஜனநாயகம் மலரப் போராடிவரும் 65 வயதான இளவரசர் பஹ்லவி, தற்போது ஈரானின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து மக்களைப் போராட அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்த அழைப்பை ஏற்று, ஈரானில் மக்கள் வீதிகளில் இறங்கி பஹ்லவி திரும்புவார் என முழக்கமிட்டு வருகின்றனர். இதற்கிடையே, ரெசா பஹ்லவி ஈரான் திரும்ப முடியுமா என்ற் கேள்வியும் எழுந்துள்ளது.

ரெசா பஹ்லவி

இதுதொடர்பாக பதிலளித்துள்ள அவர், “சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது ஈரானுக்குத் திரும்பத் தயாராக உள்ளேன். தேசத்திற்கு சேவை செய்ய தனது வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்றுள்ளேன். இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான இறுதி முயற்சியை வழிநடத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் பட்டத்து இளவரசராக தெரியும் ரெசா பஹ்லவிக்கு, ஈரானில் ஆதரவு இருந்தாலும், தற்போது அவர் அங்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவராகவே பதியப்படுகிறார். ஆகையால், கடந்த 46 ஆண்டுகளில் இவ்வளவு உயர்ந்த அளவிலான ஆதரவுடன் விளங்கும் இஸ்லாமிய குடியரசான ஈரானை, அவரால் எவ்வாறு கவிழ்க்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது. மேலும், தற்போது வரை கமேனியின் ஆட்சியே அங்கு நிலவுகிறது. ஆகையால், அவர் இருக்கும்வரை ரெசாவால் ஒருபோதும் ஈரானில் கால் வைக்க முடியாது என்பது சொல்லத் தேவையில்லை. தவிர, அவர் உடனடியாக கைதும் செய்யப்படுவார். ஒருவேளை, கமேனி ஆட்சி கவிழ்ந்து ரெசா ஈரானுக்குள் வந்தாலும், அவரை கமேனி தொடர்பாளர்கள் நீடிக்கவிடுவார்களா என்பதும் சந்தேகமே என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.