qatar shuts lng web
உலகம்

’ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..’ உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான்!

"இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம்; மீறி நுழைந்தால் கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும்" என ஈரானியப் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க முயற்சிக்கிறது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து உலக நாடுகள் கவலையில் உள்ளன.

செய்தியாளர் - இனியா

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

ஈரானியப் புரட்சிகர காவல்படையின் மூத்த ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சர்தார் இப்ராகிம் ஜப்பாரி (Sardar Ebrahim Jabbari) கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. தடையை மீறி நுழைய முயலும் எந்தவொரு கப்பலும் எமது வீரர்களால் தீக்கிரையாக்கப்படும்" எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஈரான் எல்லைக்கு உட்பட்ட பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகே கப்பல்கள் வெடித்துச் சிதறுவதும், அதிலிருந்து கரும்புகை வெளியேறுவதும் போன்ற செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், திங்கட்கிழமை அன்று ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றும், அமெரிக்கக் கூட்டணியைச் சேர்ந்த எரிபொருள் கப்பல் ஒன்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பற்றி எரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தட்டுப்பாடு ஏற்படுமா..?

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இந்த முடக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் 77 டாலரைக் கடந்துள்ள நிலையில், போர் நீடித்தால் இது 100 முதல் 200 டாலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

இந்தியாவைப் பொறுத்தவரை, நமது கச்சா எண்ணெய் இறக்குமதியில் சரிபாதி இந்தப் பாதையைச் சார்ந்து உள்ளது. தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் சுமார் 10 நாட்களுக்கான கச்சா எண்ணெயும், ஒரு வாரத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பும் மட்டுமே உள்ளன. நெருக்கடிகாலத் தேவைக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோலிய பாதுகாப்பு கையிருப்பு மேலும் ஒரு வாரத்திற்கு இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யும். இருப்பினும், சமையல் எரிவாயு விநியோகத்தில் இந்தியா அதிக சவால்களைச் சந்திக்க நேரிடும். இந்தியாவின் 85 சதவீத எல்.பி.ஜி தேவை இறக்குமதி மூலமே பூர்த்தியாகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா மீண்டும் ரஷ்யாவைத் தனது முக்கிய கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சார்ந்து இல்லாத சுமார் 1 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதுதவிர, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து கூடுதல் எண்ணெய் பெறவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

qatar shuts lng

முன்னதாக கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி நடந்த கடற்படைப் பயிற்சியின் போதும் ஈரான் இந்தப் பாதையைத் தற்காலிகமாக மூடியிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நேரடிப் போர் பதற்றம் உலக நாடுகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் வரை எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகள் தொடரும் என்றே தெரிகிறது.