ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப் Pt web
உலகம்

புதிய பிரச்னையை உருவாக்கிய ட்ரம்ப்.. எதிர்த்த பாகிஸ்தான்.. ஒன்றுகூடும் சவூதி, எகிப்து?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prakash J

ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்துவது புதிய பிரச்னைக்குக் காரணமாகியுள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக ’தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்

இந்தச் சூழலில், ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்துவது புதிய பிரச்னைக்கு காரணமாகியுள்ளது.

ஆபிரகாம் உடன்படிக்கை என்பது கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையே அதிகாரப்பூர்வ உறவை உருவாக்க அமெரிக்கா முன்னெடுத்த ஓர் அமைதி ஒப்பந்தமாகும். எளிமையாகச் சொன்னால், இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டு, அதனுடன் நட்பு மற்றும் வர்த்தக உறவை தொடங்குவது ஆகும். இந்த ஒப்பந்தத்தில், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கெனவே இணைந்திருக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர்

அதேசமயம், சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையவில்லை. இந்தச் சூழலில்தான் மேற்காசிய போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானும் பேசி வரும்நிலையில், இதன் ஒரு பகுதியாக ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சமரசத்திற்கு உதவி வரும் இஸ்லாமிய நாடுகளை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக ட்ரூத் சமூகத்தளம் மூலம் விடுத்த அழைப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃபுக்கு பதிலாக அந்நாட்டுத் தலைமை தளபதி ஆசிம் முனீர் பெயரைக் குறிப்பிட்டிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் உண்மையான அதிகாரம் பிரதமரிடம் இருக்கிறதா அல்லது தலைமைத் தளபதியிடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் அழைப்பை ஏற்றால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலிருந்தே கடும் எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஜா ஆசிப்

இதற்கிடையே, ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலை அங்கீகரிக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தங்கள் நாட்டின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிரானது என்றும் எனவே, இதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அழைப்பை பாகிஸ்தான் நிராகரித்துவிட்ட நிலையில் சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட பிற இஸ்லாமிய நாடுகளும் இதே முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.