ஈரான் ஒப்படைக்கும் நச்சுத்தன்மை கொண்ட யுரேனியம்.. இதை இடமாற்றம் செய்ய முடியுமா?
ஈரான் 60% செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியம் கையிருப்பை கைவிட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல IAEA வகை 30B கொள்கலன்கள், உயர் அழுத்தம்-வெப்பத்தைத் தாங்கும் எஃகு உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஈரான் தன்வசம் வைத்திருக்கும் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோ யுரேனியம், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக ’தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்கவைத்துக்கொள்ள அந்நாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஈரான் அதனை இடமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டால், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாடுகளுக்கு இடையே பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியுமா? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியுமா?
யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு வாயு (Uranium hexafluoride gas) மிகவும் ஆபத்தானது: இது வெளியே பரவினால், அதிக நச்சுத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட ஃப்ளூரைடு சேர்மங்களை உருவாக்கும். இவற்றை சுவாசிக்கும்போது உயிரிழப்பை ஏற்படுத்துவதோடு, தோலையும் எரிக்கக்கூடும்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) குறிப்பிட்ட நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த முகமையின் இணையதளத்தின்படி, செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடை வகை 30B கொள்கலன்களில் கொண்டு செல்லலாம். இவை அதிக வலுவூட்டப்பட்ட, தரப்படுத்தப்பட்ட எஃகு உருளைகள் ஆகும். இவை உயர் அழுத்தம் மற்றும் வெப்பத்தைத் தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அபாயங்களைத் தவிர்ப்பதற்காக இந்த உருளைகள் வேண்டுமென்றே சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் IAEA கூறியுள்ளது.
கடந்த காலத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
1980-களின் நடுப்பகுதியில் மருத்துவ ஐசோடோப் உற்பத்திக்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா கனடாவிற்கு ஏற்றுமதி செய்தது, ஆனால் உற்பத்தியாளர்கள் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கு மாறியதால், அந்த ஏற்றுமதி படிப்படியாக நின்று போனது.
சோவியத் ஒன்றியத்திலிருந்து எஞ்சியிருந்த அணுப் பொருட்களை அகற்றுவதற்காக, 'புராஜெக்ட் சஃபையர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையின் கீழ், 1994-ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் கஜகஸ்தானிலிருந்து சுமார் 600 கிலோகிராம் (1,323 பவுண்ட்) ஆயுதத் தர யுரேனியத்தை விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது.

