asim munir reuters
உலகம்

அச்சத்தில் இந்தியா.. அலறவிட்ட பாகிஸ்தான்.. அசிம் முனீர் கைக்கு வந்த அதிகாரம்!

ஒரு ராணுவத் தலைவருக்கு இத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Prakash J

பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான அசிம் முனீருக்கு (Asim Munir) தற்போது பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது,

அண்டை நாடான பாகிஸ்தானின் தற்போதைய அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார், ராணுவத் தலைவரான அசிம் முனீர். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சபட்ச பதவியான பீல்டு மார்ஷல் பதவியில் உள்ள அசிம் முனீருக்கு, புதிய ராணுவச் சட்டங்கள் மூலம் மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூத்த அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பணியாளர்கள் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு ஆகியவை அசிம் முனீரின் நேரடிக் கண்காணிப்புக்குச் சென்றுள்ளது. அதாவது தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் மீதான முழுமையான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் (Operational Command) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகளின் பணி நீக்கங்கள், ஓய்வுகள், சேவைகள் நீட்டிப்பு என அவர்களுடைய மாற்றம் தொடர்பான முழு அதிகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அணுஆயுதங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகளைப் பராமரிக்கும் அமைப்பில் முதன்மை வழிகாட்டும் அதிகாரமும், 'சிறப்பு முதலீட்டு வசதி கவுன்சில்' (SIFC) மூலம் நாட்டின் பொருளாதார முடிவுகள், அந்நிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு, முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வியூக ரீதியிலான விவகாரங்களில் பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராகச் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சட்ட மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் (Defence Forces Act மற்றும் 27th Amendment) மூலமாக முன்னோடியில்லாத அளவிலான விரிவான அதிகாரங்கள் அசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகாரங்கள் மேலும் அவரை வலுவேற்றும் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு ராணுவத் தலைவருக்கு இத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.