Khawaja Asif reuters
உலகம்

பலூச் நடத்திய தாக்குதல் | ”பாகி. ராணுவம் பலவீனமாக உள்ளது” - ஒப்புக்கொண்ட அமைச்சர்!

பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.

Prakash J

பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த வாரம் பலூசிஸ்தான் மாகாணத்தில், 40 மணி நேரத்துக்குள் 12-க்கும் அதிகமான இடங்களில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர். அப்போது அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதலும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இந்தப் பலூசிஸ்தான் மாகாணம் அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு, ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். எனினும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவ மற்றும் கப்பல் படை தளங்களில் புகுந்து, அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சி அளித்த இந்த அமைப்பினர், கடந்தாண்டு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தினர்.

BLA

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுகூட, அவர்கள் பாகிஸ்தானில் தாக்குதல்களை அரங்கேற்றினர். இந்த அமைப்பை, அமெரிக்கா தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் பலூசிஸ்தான் மாகாணத்தில், 40 மணி நேரத்துக்குள் 12-க்கும் அதிகமான இடங்களில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர். அப்போது அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதலும் வெடித்தது. இதில், பொதுமக்கள் 31 பேர், பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 145 பேரும், பாதுகாப்புப் படையினர் 17 பேர் என சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் தற்போது வாய் திறந்துள்ளது. பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், "புவியியல் ரீதியாக பாகிஸ்தானில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை பலூசிஸ்தான் கொண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது ஒரு மக்கள்தொகை நிறைந்த நகரத்தைக் கட்டுப்படுத்துவதைவிட மிகவும் கடினமானது.

Khawaja Asif

மேலும் இதற்குப் பெருமளவிலான படைகளை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். நமது துருப்புக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய பகுதியை பாதுகாப்பதாலும், ரோந்து மேற்கொள்வதாலும் அவர்கள் உடல்ரீதியாக பலவீனமாக உள்ளனர்” என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், ”பொதுமக்களைக் கொன்ற பலூச் விடுதலை இராணுவத்திடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது” என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.