அமெரிக்கா - ஈரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது தொடர்பான கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில், வளைகுடாப் பகுதியில் மொத்தம் 16 இந்தியக் கொடி தாங்கிய கப்பல்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் 5ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்தப் போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் தேவைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். இந்தப் பாதை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தியாவின் 60% எரிவாயு (LPG) தேவை இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதையை சில நாடுகளுக்கே மட்டுமே ஈரான் திறந்துவிட்டுள்ளது. அதன் எதிரி நாட்டுக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் அணு உலைகள் மற்றும் பாலங்கள் மீது நாளை (ஏப்.7) தாக்குதல் நடத்தி எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், வளைகுடாப் பகுதியில் மொத்தம் 16 இந்தியக் கொடி தாங்கிய கப்பல்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கப்பல்கள் பெர்சியன் வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், மொத்தம் சுமார் 433 இந்திய மாலுமிகள் உள்ளனர். இதில் கச்சா எண்ணெய் கப்பல்கள் 6, சரக்கு பெட்டக கப்பல்கள் 3, எரிவாயு கப்பல்கள் 3, இதர கப்பல்களில் 2 பல்க் கேரியர்கள், 1 கெமிக்கல் டேங்கர் மற்றும் 1 அகழ்வாராய்ச்சி கப்பல் என மொத்தம் 16 கப்பல்கள் சிக்கியுள்ளன. எனினும், இந்தியக் கடற்படையால் பல கப்பல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசு அமைத்துள்ள Quick Response Team (QRT) மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இந்தக் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஈரானுடன் தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 'கிரீன் ஆஷா', 'கிரீன் சான்வி' ஆகிய கப்பல்கள் கிழக்கு ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்திய துறைமுகத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றன. ஜலசந்தியில் சிக்கியிருந்த தனது எல்பிஜி சரக்குகளை இந்தியா கவனமாக வெளியேற்றிவரும் நிலையில், ஷிவாலிக், நந்தா தேவி, பைன் கேஸ், ஜக் வசந்த், பிடபிள்யூ எல்ம் மற்றும் பிடபிள்யூ டயர் ஆகிய 8 சரக்கு கப்பல்கள் ஏற்கெனவே இந்தியாவை வந்தடைந்துள்ளன. இந்த வெற்றிக்கு மத்தியில், எல்பிஜி எரிபொருளை ஏற்றிச் செல்லும் 'ஜக் விக்ரம்' கப்பல், தரவுகளின்படி இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் உள்ளது. இதையும் மீட்கும் பணியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.