ஈரானின் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது. டிமோனா அணுசக்தி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியபோதும், சில ஏவுகணைகள் இலக்கைத் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானுக்கும் - அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே நடைபெறும் போர் 3 வாரமாக தொடர்ந்து வருகிறது. போரின் தொடக்கத்தில் ஈரானால் இந்த போரில் வீரியமாக பதிலடி கொடுக்க முடியாது என்று பேசப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமான ஈரானிய ஏவுகணை தளங்கள் தகர்க்கப்பட்டன.
ஆனால், போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தங்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிலும் சமீபத்தில் இஸ்ரேலிய அணுசக்தி நிலையமான டிமோனாவில் ஈரானிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், இதில் 92% ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு நகரங்களிலும், அயன் டோம் உள்ளிட்ட ஏவுகணைகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கைத் தவறவிட்டன என்றும், இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்ட இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலிய நகரங்களை நேரடியாகத் தாக்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணைகள் எவ்வாறு ஊடுருவின என்பதைக் கண்டறிய இஸ்ரேல் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறிப்பாக டிமோனா நகரில் ஈரானின் ஏவுகணை இதுவரை இல்லாத சக்தி வாய்ந்த தாக்குதலை மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.