’இது ஒண்ணு போதும்..’ - ஈரான் வசமுள்ள கடைசி துருப்புச்சீட்டு.. அச்சத்தில் US, Israel!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல தன்னிடம் இருக்கும் எளிமையான ஆயுதங்களைக் கொண்டே ஈரான் பெரிய அழிவுகளை நடத்தி வருவது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் வியப்பாக இருக்கிறது. தவிர, அதன் பதிலடி தாக்குதலைக் கண்டு அச்சத்திலும் உறைந்துள்ளன.
போர் ஓயாத மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் இன்னும் போர் ஓயவில்லை.. நான்காவது வாரத்தைத் தொட்டிருக்கும் நிலையில், மத்தியஸ்தம் செய்வதற்கும் யாரும் இல்லை; மசிந்து போவதற்கும் ஈரான் தயாரில்லை. இதனால், இன்னும் போர் அங்கு தொடர்ந்தபடியே உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நாலாபுறம் ஈரானைத் தாக்கி வரும் நிலையில், அது, அவ்விரு நாடுகளைச் சார்ந்துள்ள பகுதிகளைத் தாக்கி வருகிறது. அதேநேரத்தில், சமீபகாலமாக ஈரானின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் எஃப்-15 ரக விமானத்தை வழிமறித்துத் தாக்கியது; 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுடைய இலக்குகளை நோக்கியும் ஏவுகணைகளை வீசி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, ’சின்ன இந்தியா’ எனப் போற்றப்படும் இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா நகரை ஈரான் தன்னுடைய ஏவுகணைகளால் சிதைத்துள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல தன்னிடம் இருக்கும் எளிமையான ஆயுதங்களைக் கொண்டே ஈரான் பெரிய அழிவுகளை நடத்தி வருவது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் வியப்பாக இருக்கிறது. தவிர, அதன் பதிலடி தாக்குதலைக் கண்டு அச்சத்திலும் உறைந்துள்ளன.
குறிப்பாக, இந்தப் போரில் ஈரான் பின்தங்கி இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரான் வசம் உள்ள அசுத்த குண்டுகள்?
இந்த நிலையில், குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் வகையில், ஈரான் மிகவும் முக்கியமான ஒரு துருப்புச் சீட்டைக் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம், அது வேறொன்றுமில்லை, அசுத்த குண்டுகள்தான். இதுபோன்ற குண்டுகளைத் தயாரிக்க அணுகுண்டில் பயன்படுத்தப்படுவதுபோல, இதில் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கப் பொருள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, மருத்துவமனைகள், அணுமின் நிலையங்கள் அல்லது ஆராய்ச்சி ஆய்வகங்களில் இருந்து பெறப்படும் கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு இதை தயாரிக்கலாம். அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின்படி, கதிரியக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சீசியம்-137, புகை கண்டறியும் கருவிகளில் பயன்படுத்தப்படும் அமெரிசியம்-241, மற்றும் அறுவைசிகிச்சைக் கருவிகளைத் தொற்றுநீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் கோபால்ட்-60 உள்ளிட்டவற்றைக் கொண்டே இந்த கதிரியக்கக் குண்டுகளை உருவாக்க முடியும்.
இதனால், அணு ஆயுதங்களைவிட இவற்றைத் தயாரிப்பது மிகவும் மலிவாகவும் விரைவாகவும் உள்ளது. மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின்படி, ஈரான் 60% யுரேனியம்-235 ஆக செறிவூட்டப்பட்ட 440 கிலோகிராம் உயர்-செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) கொண்டுள்ளது. பொதுவாக ஒரு அணு ஆயுதத்திற்கு 90% வரை செறிவூட்டல் தேவைப்படும் நிலையில், ஈரான் விரும்பினால், 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு அசுத்தக் குண்டுகள் மற்றும் பாரம்பரிய அணு ஆயுதங்கள் இரண்டையும் உருவாக்க முடியும் என அணுசக்தி நிபுணர் எட்வின் லைமன் குறிப்பிடுகிறார்.
அசுத்த குண்டுகளின் தாக்கம் எப்படி இருக்கும்?
இப்படி, சுலபமாகவும் மலிவாகவும் தயாரிக்கப்படும் இந்தக் குண்டுகள் அதன் வழக்கமான வெடிபொருளுடன் வெடிக்கும்போது கதிரியக்கப் பொருள்கள் காற்றில் சிதறடிக்கப்படுகிறது. இது ஒரு பகுதி முழுவதும் சிதறடித்து, மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இது, வெடிப்பு நடந்த இடத்தையும் தாண்டிப் பரவும், தவிர, அவற்றை சுவாசித்தால் உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீண்டகால வெளிப்பாடு லுகேமியா, புற்றுநோய்கள், இருதய நோய் மற்றும் கண்புரை போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
அதேநேரத்தில், ஒரு குண்டு வெடிக்கப்பட்டால் பொருளாதாரரீதியாக, 16 டாலர்கள் அளவுக்கு சேதம் விளைவிக்கும் எனவும், அந்நகரின் முழுப் பகுதியும் பல பத்தாண்டுகளுக்கு மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் காரணத்தினாலேயே, அசுத்தக் குண்டுகள் பேரழிவு ஆயுதங்கள் என்று அறியப்படுகின்றன. முன்னதாக, இவ்வகையான குண்டுகளை உக்ரைன் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. உலகில் எங்கும் இதுவரை வெற்றிகரமான கதிரியக்கக் குண்டுத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.
அப்படி, வைக்கப்பட்ட இடங்களில்கூட முன்கூட்டியே சென்று அழித்ததாகச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில்தான், ஈரான் அடுத்த துருப்புச் சீட்டாக அசுத்த குண்டுகளை தன் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரானிடம் உண்மையில் ஒரு கதிரியக்கக் குண்டு இருக்கிறதா என்பதும், அதை அது பயன்படுத்துமா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை, ஈரான் வைத்திருந்தாலும் அதைப் பயன்படுத்தாது என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. காரணம், அதை ஈரான் பயன்படுத்தும் பட்சத்தில் அந்த நாடே முற்றிலும் அழிவைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

