மொஜ்தபா காமேனி Pt web
உலகம்

போர் நிறுத்தம் | ஈரானில் இறுதி முடிவெடுத்தது யார்? உண்மையில் மொஜ்தபா காமேனி எப்படி இருக்கிறார்?

அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

Prakash J

2 வார தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மொஜ்தபா காமேனியே சம்மதம் தெரிவித்ததாக, ஆக்சியோஸ் (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவெளியில் தோன்றாத காமேனி, இதற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்தும் நடைபெற்றது. இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஒட்டுமொத்த ஈரானும் ஓர் இரவுக்குள் அழிக்கப்படும் என 48 நேர கெடு விதித்திருந்தார். ஆனாலும் ஈரான் பிடிவாதம் காட்டியது. இதற்கிடையே பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்தது. கெடு முடிய சரியாக, 90 மணிநேரம் இருந்த நிலையில், இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. கூடவே, ஈரான் 10 அம்ச திட்டங்களையும் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில், ஈரானின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமேனி இருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாததும், அவர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டதும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ட்ரம்ப் - மொஜ்தபா காமேனி

காரணம், அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும், அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் பற்றிய தகவலைச் சேமிக்கும் நிலையில் இஸ்ரேல் உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், 2 வார தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மொஜ்தபா காமேனியே சம்மதம் தெரிவித்ததாக, ஆக்சியோஸ் (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவெளியில் தோன்றாத கமெனி, இதற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும், ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அவர் இந்தச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும் முக்கியமாகத் தூதுவர்கள் மூலம் குறிப்புகளை அனுப்பித் தொடர்புகொண்டார் என்றும் ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது.

மொஜ்தபா காமேனி

இதையடுத்தே, இந்தப் போரில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், அதற்கு காமேனியின் ஆலோசனையே காரணம் எனவும் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்பிறகே ஈரான் அமைச்சர் அராக்சி போர் நிறுத்தம் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முக்கியப் பங்கு வகித்துள்ளார். இந்த ஆலோசனையின்போது சீனாவும் இருந்ததாக செய்தி வெளியானது. இதை அதிபர் ட்ரம்பும் ஒப்புக்கொண்டிருந்தார். நிலைமை இப்படியிருக்க, உண்மையில் மொஜ்தபா காமேனி எப்படி இருக்கிறார்? அவர் கோமாவிலிருந்து வெளிவந்து விட்டாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், அதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.