செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் ஜலசந்திப் பகுதியில் ஏமனின் ஹவுதி அமைப்பினர் தங்களின் தாக்குதல் திறனை விரிவுபடுத்திப்படுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஒரே நிரந்தர இராணுவத் தளமான கேம்ப் லெமோனியர் (Camp Lemonnier) அவர்களின் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் நேரடி எல்லைக்குள் வந்துள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்திய தாக்குதலின்போது ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோகா (Mocha) துறைமுக நகரத்தையும், பாப் அல்-மண்டேப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரத்தையும் அவர்கள் கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில், அடுத்தகட்டமாக ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஒரே நிரந்தர இராணுவத் தளமான கேம்ப் லெமோனியரும் அவர்களின் நேரடி எல்லைக்குள் வந்துள்ளது.
ஹவுதியின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, அமெரிக்கா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பங்களையும் இந்தத் தளத்தில் தீவிரமாகப் பலப்படுத்தி வருகிறது. ஏமன் கடற்கரை மற்றும் மயூன் தீவுப் பகுதியில் இருந்து ஜிபூட்டி கடற்கரை வெறும் 30 முதல் 32 கி.மீ தொலைவிலும், அமெரிக்காவின் கேம்ப் லெமோனியர் தளம் சுமார் 130 கி.மீ தொலைவிலும் மட்டுமே அமைந்துள்ளன. இந்த தளத்தில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கியுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான முதன்மை மையமாக இது செயல்படுகிறது.
உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் சுமார் 12% பங்கைக் கொண்டுள்ள செங்கடல் வழித்தடத்திற்கு மிக அருகில் இத்தளம் அமைந்துள்ளதால், மோதல் தீவிரமடைந்தால் கப்பல் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படும். ஜிபூட்டியில் அமெரிக்கா மட்டுமின்றி சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளின் ராணுவ முகாம்களும் அமைந்துள்ளதால், இப்பகுதியில் ஏற்படும் பதற்றம் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்னொரு புறம், மோச்சா மற்றும் மயூன் நகரங்களை ஹவுதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஏமன் போர் எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியத்தில் நடக்கும் பெரிய போருடன் இணைந்துள்ளது. தவிர, சவூதி பாதுகாப்பு, உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் ஈரான்-அமெரிக்கா இடையே தொடரும் மோதல் ஆகியவை குறித்த கவலைகளையும் தூண்டியுள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து 82,000-க்கும் மேற்பட்ட ஏமன் நாட்டினர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 2,000-க்கும் அதிகமானோர் குறுகிய நீர்வழிப்பாதையைக் கடந்து ஜிபூட்டிக்குச் சென்றுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.