ஹவுதி கையில் சிக்கிய பாதை.. ஆட்டிப் படைக்கப் போகும் ஈரான்.. ஆபத்தை எதிர்கொள்ளும் இந்தியா?
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அவர்கள் பாப் அல்-மண்டேப் நீரிணையை கைப்பற்றியுள்ளனர். இது, இந்தியாவுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய கப்பல்கள் தனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்திய தாக்குதலின்போது ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோகா (Mocha) துறைமுக நகரத்தையும், பாப் அல்-மண்டேப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரத்தையும் ஹவுதி அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், 29 கி.மீ அகலமுள்ள பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களையும் அவர்கள் நேரடியாகக் கண்காணிப்பதுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும், எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹவுதியின் இந்த நடவடிக்கையால், சவுதி அரேபியா தனது கிழக்கு-மேற்கு பைப்லைனை மூடியுள்ளது. முன்னதாக, அதன் தாக்குதலில் இந்த பைப் லைனும் சேதமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சவூதியே மாற்றுவழிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாப் அல்-மண்டேப் நீரிணையை ஹவுதி கைப்பற்றியுள்ள நிலையில், அது இந்தியாவுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மண்டேப் பாதை, இந்தியாவிலிருந்து சுமார் 3,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது, இந்தியாவின் சர்வதேச வர்த்தகப் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியமான கடல்சார் பாதையாகும். அதேபோல், ஹார்முஸ் நீரிணைப் பாதையும் இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளது. இப்பாதைகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், இந்திய சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் சுத்திகரிக்கப்பட்ட டீசல் மற்றும் விமான எரிபொருள் விநியோகமும் பெரிதும் பாதிக்கப்படும்.
அதாவது, இதன்மூலம் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும், இந்தப் பாதைகளில் அச்சுறுத்தல் ஏற்பட்டால், கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி (Cape of Good Hope) செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் கப்பல் பயணம் சுமார் 14 முதல் 20 நாட்கள் வரை தாமதமாவதுடன் கப்பல் சரக்குக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்திய கப்பல்கள் தனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

