நயீம் காசிம் x
உலகம்

லெபனான் மீது தாக்குதல்.. ஹிஸ்புல்லா தலைவர் குறிவைத்துக் கொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய அமைப்பின் தலைவராக இருந்த நயீம் காசிம், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Premkumar S

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த தாக்குதல், தற்போது பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக, 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா அதை பரிசீலனை செய்வதாக கூறியிருக்கிறது. அந்த கோரிக்கையில், ஈரான் ஆதரவு நாடான லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா - ஈரான் போர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஆதரித்ததுடன், லெபனான் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் இந்த உடன்படிக்கையில் பொருந்தாது என திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த சூழலிலதான், இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது கிட்டத்தட்ட 100 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ள நிலையில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, நகரின் மையப்பகுதியிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது. "குழந்தைகள் கதறி அழுதனர், மக்கள் பயத்தில் உறைந்து தெருக்களில் ஓடினர்" என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மாறாக இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது குண்டு வீசுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனான் மீதான தாக்குதல்

மேலும், லெபானான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குறிவைத்துக் கொல்லப்பட்டார். மேலும் நயீம் காசிமின் தனிப்பட்ட செயலாளரும், அவரது மருமகனுமான அலி யூசுப் கர்ஷி என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பு நயீம் காசிம் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தவில்லை. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஈரானுக்கு பின்னடைவாக பார்க்கப்படும்.