முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்.. ஆனாலும் தொடரும் தாக்குதல்.. பதற்றம் குறையாத வளைகுடா!
ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே லவான் தீவிலுள்ள ஈரானிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வளைகுடா நாடுகளிலும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி, போர் நிறுத்தம் பெயருக்கு மட்டுமே என கேள்வி எழுகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய ஈரானிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தாக்குதல் நடந்ததாக சம்பவத்தைப் பதிவு செய்துள்ளது என்று ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் செய்தி நிறுவனமான ஷனா கூறியிருக்கிறது
உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் அந்த வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்தவும், அந்த இடத்தை பாதுகாக்கவும் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டன என்றும் அச்செய்தி கூறுகிறது
மேலும் பல வளைகுடா நாடுகள் தங்கள் பிரதேசங்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததால் ஏற்பட்டவை என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது கையாண்டு வருகின்றன," என்றும் அந்த அமைச்சகம் கூறியிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்த முழுமையான அழிவைத் தடுப்பதற்கான கடைசி நேர முயற்சியாக இந்த போர் நிறுத்தம் எட்டப்பட்டது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தன.

