வளைகுடாவில் தொடங்கிய போர், கடந்த ஜூன் 17-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மூடப்பட்ட ஹார்முஸும் திறக்கப்பட்ட நிலையில், எண்ணெய் போக்குவரத்து மெல்ல சீராகி வந்தது. இவ்வாறு, மத்தியக் கிழக்கில் போர் மேகங்கள் சற்று தணிந்திருந்த நிலையில், ஹார்முஸ் வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஜூலை 7-ம் தேதி அமெரிக்க ராணுவம் ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியது.
தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனையடுத்து, மீண்டும் இருநாடுகளுக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் நிலையில், பதிலுக்கு தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தசூழலில் தான், இன்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் "ஈரானின் ராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அமெரிக்கப் படைகள் இன்று மதியம் 2 மணி அளவில் தொடர்ந்து 6-வது இரவாக ஈரானில் புதிய அலைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் கடற்கரைப் பகுதி பாதுகாப்பை மட்டுமின்றி, உள்நாட்டு போக்குவரத்து மற்றும் தளவாடக் கட்டமைப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தை உலகின் மிக சக்திவாய்ந்த படையாக தான் மறுசீரமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், ஈரானில் நாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறோம். இந்த உழைப்பிற்கான பலனை நீங்கள் மிக மிக விரைவில் பார்க்கப் போகிறீர்கள் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரானுடனான பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில் டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் முடிவுகள் சாதகமாக இருக்கும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.