ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை, தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக நிகழ்ந்த அந்தச் சம்பவம் என்ன? பார்க்கலாம்
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முறியடிக்கும் நோக்கில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் மிக உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."
இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் ஒரு அசாதாரணமான நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள முக்கியக் கிறிஸ்தவ மத போதகர்களை வரவழைத்து, தனக்காகவும் தனது நாட்டின் வெற்றிக்காகவும் ஒரு விசேஷ பிரார்த்தனை கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார். தலைமை போதகர் டாம் முல்லின்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அமெரிக்க அரசியலில் ஒரு புதிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் ஒரு அதிபர், தனது அலுவலகத்தில் இத்தகைய பகிரங்கமான மத நிகழ்வை நடத்துவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிபரின் இந்தச் செயலுக்கு அமெரிக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மோதலில் இதுவரை 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான 'ஆக்சியோஸ்' நடத்திய சமீபத்திய ஆய்வில், 50 விழுக்காட்டுக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் இந்தப் போரையும், டிரம்ப்பின் தற்போதைய முடிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரியவந்துள்ளது
இந்த விவகாரத்தை முன்வைத்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV, வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒருபுறம் அமைதிக்கான அழைப்பு, மறுபுறம் போருக்கான பலம் கோரும் பிரார்த்தனை. இதனைச் சுட்டிக்காட்டிய வெங்கடேசன், 'ஆண்டவரின் ஆசி யாருக்கு? நீதியும் அமைதியும் ஒருசேர வருமா?' என்று மிக ஆழமான ஒரு வினாவை முன்வைத்துள்ளார்.