சீனாவின் Henan Kuangshan Crane Co., Ltd நிறுவனம், 237 கோடி ரூபாய் மதிப்பில் 180 மில்லியன் யுவானை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கி உலகை வியக்க வைத்துள்ளது. 7,000 ஊழியர்கள் 15 நிமிடங்களில் எவ்வளவு பணம் எண்ண முடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இது ஊழியர்களின் நிதிச் சுமைகளை குறைக்க உதவுகிறது.
உலகிலுள்ள பெருபாலான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போனஸ் மற்றும் சம்பள உயர்வு குறித்து விரக்தியையே வெளிப்படுத்துவார்கள். அதிலும் பல நிறுவனங்கள் ஊழியர்களிடம் வேலையை சக்கையாக பிழிந்து வாங்கிவிட்டு பின்பு தூக்கி ஏறியப்படுவார்கள்.
இப்படிப்பட்ட பல நிறுவனங்களுக்கு மத்தியில் சீனாவின் Henan Kuangshan Crane Co., Ltd என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 180 மில்லியன் யுவான், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 237 கோடி தொகையை ஆண்டின் இறுதி போனஸாக வழங்கியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்திர விழாவில், சுமார் 800 மேசைகளில் கட்டுக்கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலந்துகொண்ட சுமார் 7,000 ஊழியர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதாவது சுமார் 15 நிமிடங்களுக்குள் அவர்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ, அவ்வளவு பணத்தையும் அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய லாபத்தில், ஏறக்குறைய 70% தொகையை ஊழியர்களுக்கே போனஸாகப் பிரித்துக் கொடுத்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் குய் பெய்ஜுன் (Cui Peijun), தனது ஊழியர்கள் கார் கடன் மற்றும் வீட்டுக்கடன் போன்ற நிதிச் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்ய விரும்பி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளதோடு பலரையும் பொறாமைப்படவும் வைத்துள்ளது.
இந்த நிறுவனம் இப்படி வித்தியாசமாக போனஸ் வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஆம் ஆண்டில் 260 மில்லியன் யுவான் லாபம் ஈட்டியதால் அதில் 170 மில்லியன் யுவானை போனஸாக வழங்கியது. சர்வதேச மகளிர் தினத்தன்று 2,000 பெண் ஊழியர்களுக்கு சுமார் 1.6 மில்லியன் யுவான் போனஸ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.