model image google gemeni
உலகம்

செயற்கைச் சூரியனை உருவாக்கும் சீனா.. 2030க்குள் புதிய மைல்கல்லை எட்ட முடிவு!

சூரியனின் அணு இணைவு ரகசியத்தை ஆய்வகத்தில் மீண்டும் உருவாக்க சீனாவின் ‘செயற்கை சூரியன்’ EAST திட்டம் உலக மின்சாரப் புரட்சிக்கான பாதையை அமைக்கிறது

Prakash J

அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு எனப் பல துறைகளிலும் அண்டை நாடான சீனா, அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு போட்டிபோட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா ஒரு செயற்கை சூரியனை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இது உண்மையான சூரியனை உருவாக்குவது அல்ல... மாறாக, சூரியன் எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறதோ, அதே செயல்முறையை ஆய்வகத்தில் கட்டுப்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வதே இதன் நோக்கம்.

உண்மையில் அணு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூரியனில் நடைபெறும் ஆற்றல் உற்பத்தியை பூமியில் மீண்டும் உருவாக்கும் முயற்சியே இந்தச் செயற்கை சூரியனாகும். சூரியனில், ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இது 100 மில்லியன்°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து, கார்பன் டை ஆக்சைடை உருவாக்காமல் பெருமளவு ஆற்றலை வெளியிடுகிறது. சீனா, இதே அணு இணைவு செயல்முறையை பூமியில் உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

இதையும் படிக்க: ரஷ்யாவை வீழ்த்த பலே திட்டம்.. புதிய கேடயத்தை உருவாக்கும் உக்ரைன்.. ’பிரேயா’ என்றால் என்ன?

சீன அறிவியல் அகாதமியின்கீழ் உள்ள பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வளையப்புல மீக்கடத்தி காந்தம், 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 டன் எடையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான 'D' வடிவக் கட்டமைப்பாகும். சீனா உருவாக்கும் இந்த திட்டத்திற்கு ’EAST’ (Experimental Advanced Superconducting Tokamak)எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹெஃபெய் நகரில் அமைந்துள்ளது. டோகமாக் எனப்படும் வளைய வடிவ காந்த உலையில் மிக அதிக வெப்பமுள்ள பிளாஸ்மாவை காந்தப் புலங்களால் கட்டுப்படுத்துகிறது.

இதன் நோக்கம், நீண்ட நேரம் நிலையான அணு இணைவு நிகழச் செய்வதாகும். ஏற்கெனவே இந்த திட்டத்தின் மூலம் (EAST) பல முறை 100 மில்லியன் °C-க்கும் அதிகமான வெப்பநிலை உருவாக்கப்பட்டுள்ளது. சில சோதனைகளில் 1,000 வினாடிகளுக்கும் மேல் அதிக வெப்ப பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவையே மிரட்டிய Gen Z.. உலகிலும் அரசியல் மாற்றம்.. Pak-இல் உருவாகாதது ஏன்?

இது வணிகரீதியான அணு இணைவு மின்நிலையங்களுக்கு தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை சோதித்து வருகிறது. எனினும், கோடிக்கணக்கான டிகிரி வெப்பத்தில் பிளாஸ்மாவை நிலையாக வைத்திருப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்த அமைப்புகள் உற்பத்தி செய்யும் ஆற்றலைவிட அதிக ஆற்றலை இயக்குவதற்குப் பயன்படுத்த வேண்டிய நிலை பல சோதனைகளில் உள்ளது. தவிர, வணிக ரீதியாக செயல்படும் Fusion மின்நிலையங்கள் உருவாக இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவை.

ஒருவேளை, இந்த திட்டம் வெற்றியடைந்தால், உலகின் எதிர்கால மின்சார உற்பத்தி முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் சாதனையாகக் கருதப்படும். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் அணுக்கரு இணைவு ஆற்றலில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சீனாவின் லட்சியத் திட்டத்தில் இந்தச் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும். சீனா தவிர, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகளும் அணு இணைவு மின்சாரத்தை நடைமுறைக்குக் கொண்டுவர தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன.