Nobel Prize in Economics award nobel prize
உலகம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு | மூவருக்கு அறிவிப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel prze

அதைத் தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம்.மார்டினிஸ், பிரிட்​டனைச் சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸைச் சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. குவாண்​டம் ஊடுருவல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜப்பானைச் சேர்ந்த க்யோடோ பல்கலை பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்குப் பார்வைக்காக இவ்விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு, சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடும் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாமச்சடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக அவர்கள் மூவருக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. நோபல் பரிசு வென்றவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் $1.17 மில்லியன்) மதிப்புள்ள குறிப்பிடத்தக்க ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி முறையான நோபல் பரிசு விழா நடைபெறுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக, தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ட்ரம்ப்க்கு நோபல் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பரிந்துரை செய்திருந்த நிலையிலும், நோபல் குழுவின் முடிவு வேறுவிதமாக அமைந்தது.