அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள் என10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில், அடுத்து சீனாவில் 10 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது உலக அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிக முக்கியமான விண்வெளி மற்றும் அணுசக்தி தொடர்பான இரகசிய திட்டங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகள், மர்மமான முறையில் காணாமல் போனதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் சமீபத்தில் வெளியாகி இருந்த செய்தி உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் டேவிட் ஹிக்ஸ், ஃபிராங்க் மைவால்ட், அந்தோனி சாவேஸ், மோனிகா ரெஸா, மெலிசா காசியாஸ், ஸ்டீவன் கார்சியா, நூனோ லோரெய்ரோ, கார்ல் கிரில்மேயர், வில்லியம் நீல் மெக்கஸ்லாண்ட், ஜேசன் தாமஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இதில் அடக்கம். இதில் சில பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் சிலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இவர்கள் வீட்டிலிருந்து நடந்து சென்றபோது காணாமல் போயுள்ளனர்.
அவர்களின் மொபைல் போன், பர்ஸ், சாவி போன்றவை வீட்டிலேயே இருந்துள்ளன. இந்த வழக்குகளில் பல தற்கொலை, விபத்துகள் அல்லது தனிப்பட்ட குற்றங்கள் எனக் கூறப்பட்டாலும், அணு அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியத் துறைகளுடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஒன்றாக இணைந்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எப்.பி.ஐ உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்த அதிபர் ட்ரம்பர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிலும் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றிய குறைந்தது ஒன்பது சீன விஞ்ஞானிகள், இதே போன்ற சூழ்நிலைகளில் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 38 வயதுப் பேராசிரியர் ஒருவர், 2023 ஜூலை 1 அன்று பெய்ஜிங்கில் அதிகாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அடுத்து, சீனாவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஃபெங் யாங்ஹே, தேசிய செயற்கைக்கோள் வானிலை மையத்தில் விண்வெளி நிபுணராகப் பணியாற்றிய ஜாங் சியாவோசி, முன்னணி ட்ரோன் நிபுணர்களில் ஒருவரான ஜாங் டைபிங்கின், முக்கிய தரவு விஞ்ஞானி என்று வர்ணிக்கப்பட்ட லியு டோங்ஹாவோ, உயிரி மருத்துவ வேதியியலாளரான லி மின்யோங், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இராணுவ விஞ்ஞானியும் நுண்மின்னணுவியல் நிபுணருமான சென் ஷுமிங், புகழ்பெற்ற வேதியியலாளரான ஷோ குவாங்யுவான், இவர்களைத் தவிர ஹைப்பர்சோனிக்ஸ் துறை விஞ்ஞானிகளான ஃபாங் டைனிங், யான் ஹாங் ஆகியோர் பற்றிய மரணங்களில் சதி நடந்ததற்கான நம்பகமான ஆதாரம் இதுவரை இல்லை என்றாலும், அந்த மரணங்கள் நிகழ்ந்த நேரமும், விஞ்ஞானிகளின் பணியின் நுட்பமான தன்மையும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும், சீன ஊடகங்கள் இந்த மரணங்களை அடிக்கடி சாலை விபத்துகளுடன் தொடர்புபடுத்தி வருகின்றன. குறிப்பாக, அதுகுறித்த காரணங்களை அவை வெளியிடவில்லை. அதேநேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான எதிர்பாராத மரணங்கள் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.