வேகமெடுக்கும் செவ்வாய் கிரகம் |ஒரு நாளைக்கு மில்லி செகண்ட் குறைகிறது.. விஞ்ஞானிகள் விளக்கம்!
செவ்வாய் கிரகம் அமைதியான, செயல்பாடற்ற ஒரு கோள் என்று கருதப்பட்டு வந்த நிலையில், அதன் சுழற்சி வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லி ஆர்க்க் செகண்ட்ஸ் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்தின் ஒரு நாள் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி செகண்டில் ஒரு சிறு பகுதி அளவு குறைந்து கொண்டே வருகிறது.
நாசாவின் இன்சைட் லேண்டர் மூலம் சேகரிக்கப்பட்ட மிகத் துல்லியமான தரவுகள் மற்றும் அதில் உள்ள 'ரைஸ்' என்ற கருவி மூலம் இது கண்டறியப்பட்டது. செவ்வாய் கிரகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதற்கு விஞ்ஞானிகள் இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைக்கின்றனர். செவ்வாயின் துருவப் பகுதிகளில் அதிகப்படியான பனி குவிவதால், அதன் நிறைப் பரவலில் மாற்றம் ஏற்படுகிறது. இது ஒரு பனிச்சறுக்கு வீரர் தனது கைகளை உட்புறமாக இழுக்கும்போது வேகமாகச் சுழல்வதைப் போன்றது.
செவ்வாயின் உட்புறப்பகுதியில் லேசான தனிமங்கள் மேலெழும்புவதால் ஏற்படும் 'நெகட்டிவ் மாஸ் அனோமலி' கிரகத்தின் சுழற்சியை வேகப்படுத்தக்கூடும் என 2026-ம் ஆண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் உள்ளுக்குள் இன்னும் உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது. தார்சிஸ் போன்ற எரிமலைப் பகுதிகளில் நிலத்தடி செயல்பாடுகள் இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் விண்கலங்களின் பயணப் பாதையைத் துல்லியமாகக் கணக்கிட இந்தத் தகவல்கள் மிகவும் அவசியமானவை.

