ஆன்மிகத் தலைவரின் திருமணம்
ஆன்மிகத் தலைவரின் திருமணம் ட்விட்டர்
உலகம்

கானா நாட்டில் 12 வயது சிறுமியை மணந்த 63 வயது ஆன்மிகத் தலைவர்.. கடும் எதிர்ப்பால் நடந்த திருப்பம்!

Prakash J

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் 63 வயதான செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர் ஒருவர் 12 வயது சிறுமியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கானா நாட்டின் தலைநகரான அக்ராவின் நுங்குவா பகுதியில் ஆன்மிக மதத் தலைவராக இருப்பவர் நுமோ போர்கெட்டி லாவே சுரு XXXIII. இவருக்கு வயது 63. இவர், 12 வயது சிறுமியை கடந்த மார்ச் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கானாவில் சட்டப்படி, திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது 18. அப்படியிருக்கும் சூழலில் 12 வயது சிறுமியை அந்த மதத் தலைவர் மணந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!

இதுதொடர்பான அந்த வீடியோவில், மணவிழாவுக்காக உள்ளூர்வாசிகள் சிலர் கூடியுள்ளனர். அவர்கள் அந்நாட்டின் உள்ளூர் மொழியான 'கா' மொழியில் உரையாடுகின்றனர். அதில் சில பெண்கள், 12 வயது சிறுமியிடம் சில ஆலோசனைகளைக் கூறுகின்றனர். ’சிறுமி தனது கணவருக்காக கவர்ச்சிகரமான ஆடைகளை அணிய வேண்டும். மனைவியாக இருக்க தயாராக இருக்க வேண்டும். கணவரிடம் தனது பாலியல் ஈர்ப்பை அதிகரிக்க வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என அவர்கள் அறிவுறுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கானா நாட்டின் சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதேவேளையில், கலாசார நடைமுறை எனக் கூறி நடத்தப்படும் குழந்தைத் திருமணங்களை தடை செய்கிறது.

இந்த விவகாரத்தில் ஆன்மிக மதத் தலைவரை விசாரிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மேலும், கானாவில் குழந்தைத் திருமண விகிதம் குறைந்து வரும் நிலையில், இந்த நடைமுறை இன்னும் தொடர்வது வேதனையளிக்கிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

’கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், ’கானாவில் 19 சதவிகித பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்துகொள்வதாகவும், 5 சதவிகித பேர் தங்களுடைய 15வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்துகொள்கிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அச்சிறுமியை அடையாளம் கண்ட போலீசார், அவரை தற்போது தாயின் உதவியுடன் தங்களுடைய பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும் இந்தத் திருமணத்தால் அந்தச் சிறுமியின் கல்வி தடைப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை.

இதையும் படிக்க: டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?