Paul Lynch
Paul Lynch bookerprizes.com
உலகம்

”தீர்க்கதரிசியின் பாடல்” - ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச்-க்கு 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு!

Prakash J

புக்கர் மற்றும் சர்வதேச புக்கர் பரிசின் வேறுபாடுகள்

புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில், அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசுகளுக்கான நோக்கம் ‘பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது மற்றும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மொழிபெயர்ப்பாளர்களின் வேலைகளை அங்கீகரிப்பது’ (to promote the value and art of literature for the benefit of the public as well as to acknowledge the often-unacknowledged work of the many literary translators) என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச்-க்கு இந்த ஆண்டு புக்கர் பரிசு

புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும். பின்னர் அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை, ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் (Paul Lynch) பெற்றுள்ளார்.

அவருடைய Prophet Song (தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில், நேற்று (நவ.26) நடைபெற்ற நிகழ்ச்சில் புக்கர் விருதுடன் பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்ட்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 லட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து தேர்வுக் குழுவினர், ’சர்வாதிகாரம் மற்றும் போரில் சிக்கிக் குலைந்த அயர்லாந்தில் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றிய ஆன்மாவை உலுக்குகிற நாவல் இது’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ”என்உயிருக்கு ஆபத்துனா அதிபர்தான் காரணம்”-இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிநீக்கமும் பின்னணியும்

கடந்த ஆண்டுக்கு இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் விருது

இரண்டாவது முறையாக அரசியல் மோதல் குறித்த நாவல்களுக்கு புக்கர் பரிசு அளிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட கதையான ‘The Seven Moons of Maali Almeida’ என்ற நாவலை எழுதியதற்காக புக்கர் பரிசை ஷெஹான் கருணாதிலகா பெற்றிருந்தார்.

2018 ஆம் ஆண்டில் ஐரிஷ் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் புக்கர் விருதை வென்றார். அதன்பிறகு, புக்கர் பரிசை வென்ற ஐந்தாவது ஐரிஷ் எழுத்தாளர் லிஞ்ச் ஆவார். இவ்விருதை வென்றது குறித்து லிஞ்ச், “புக்கர் விருதை அயர்லாந்திற்கு கொண்டுவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல்!

முன்னதாக, 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை பெறுவதற்கான மொத்தம் 163 நாவல்களிலிருந்து இறுதிச்சுற்றுக்கான நீண்ட பட்டியலில், A Spell of Good Things, Old God’s Time, Study for Obedience, If I Survive You, How to Build a Boat, This Other Eden, Pearl, All the Little Bird-Hearts, Prophet Song, In Ascension, Western Lane, The Bee Sting, The House of Doors உள்ளிட்ட 13 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் அடுத்தகட்ட இறுதிச்சுற்றுக்கு, The Bee Sting, Prophet Song, Western Lane, If I Survive You, Study for Obedience, This Other Eden உள்ளிட்ட 6 நாவல்கள் தெரிவுசெய்யப்பட்டன. இந்த நாவல்களிலிருந்து விருதுக்காக பால் லிஞ்ச்சின் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது, அவருடைய 5வது நாவல் ஆகும். இந்த நாவலை எழுத, 2018 தொடக்கம் முதல் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக பால் லிஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, புக்கர் பரிசுக்கான இறுதிச்சுற்று 6 நாவல்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ (Western Lane) என்ற நாவலும் இடம்பிடித்திருந்தது. இது அவருடைய முதல் நாவல் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இந்த நாவல், கோபி என்ற 11 வயது ஸ்குவாஷ் விளையாட்டு சிறுமியைப் பற்றிய கதையாகும்.

இதையும் படிக்க: ”உனக்கென்ன வேணும் சொல்லு” நடுவானில் விமானத்தில் மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரர்.. வைரல் வீடியோ!

கடந்தகால விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள்!

இந்த புக்கர் பரிசை, கடந்த காலங்களில் The God of Small Things (தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்) என்ற புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய், Midnight's Children (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, The Inheritance of Loss (தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்) எழுதிய கிரண் தேசாய் மற்றும் The White Tiger (தி ஒயிட் டைகர்) எழுதிய அரவிந்த் அடிகா போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருந்ததி ராய்

சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன?

அதுபோல், சர்வதேச புக்கர் பரிசு (International Booker Prize) 2005இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த இந்தப் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. இந்த விதிகளின்படி, £50,000 பரிசுத்தொகை ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க: இதனால் தான் ஹர்திக் பாண்டியா MI-க்கு சென்றார்! காரணத்தை போட்டுடைத்த குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர்!

இந்த ஆண்டு சர்வதேச புக்கர் விருதை வென்ற பல்கேரிய நாவல்

இந்த ஆண்டுக்கான (2023) சர்வதேச புக்கர் பரிசு, ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது. பல்கேரிய எழுத்தாளர் ஜோர்ஜி கோஸ்போடினோவ் எழுதிய இந்த நாவலை ஏஞ்சலா ரோடலுடன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். இந்த நாவல், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சுவிட்சர்லாந்தில் ஒரு கிளினிக்கை உருவாக்கும் மனநல மருத்துவரை மையமாகக் கொண்டது.

நீண்டபட்டியலில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நாவல்

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசின் 13 நூல்களைக் கொண்ட இறுதிப்பட்டியலில், பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ என்ற நாவலும் இடம்பெற்றிருந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட குறும்பட்டியலில், Still Born, Standing Heavy, Time Shelter, The Gospel According to the New World, Whale Boulder ஆகிய 6 நூல்களே இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் பெருமாள் முருகன் எழுதிய நாவல் இடம்பெறவில்லை. மேற்சொன்ன 6 நூல்களில்தான், இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை ‘டைம் ஷெல்டர்’ நூல் வென்றிருந்தது. இது, கடந்த மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.