ai மாதிரிப்படம் pt web
டெக்

AI - 'நான் தப்பாக்கூட சொல்லுவேன்.. பாத்து யூஸ் பண்ணனும்!!' அதிர்ச்சியை அளிக்கும் சமீபத்திய ஆய்வுகள்

MIT ஆய்வும் Netcraft தரவும் ChatGPT-ஐ கண்மூடித் தனமாக நம்பக் கூடாது என எச்சரிக்கின்றன. சிந்தனை, நினைவகம் குறையும் அபாயம் இருப்பதாகவும், தவறான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

அங்கேஷ்வர்

ஏ.ஐ தொழில்நுட்பமான சாட் ஜிபிடியை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் MIT மற்றும் சில உலகளாவிய கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய 'Your Brain on ChatGPT' எனும் ஆய்வறிக்கை வெளியானது. அதில், அதிகமாக AI தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பது சிந்தனை திறன், நினைவகம் மற்றும் படைப்பாற்றலைக் குறைக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையை வரவேற்றுப் பேசியிருக்கும் Tech Whisperer நிறுவனத்தின் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா, “ChatGPT-யை அடிக்கடி பயன்படுத்தும் பயனாளர்களில், மூளை செயல்பாடு 55% வரை குறைவாக இருந்ததோடு, நினைவக திறனும் குன்றியதைக் காட்டுகிறது. AI கருவிகள் வசதியை அதிகரிக்கும் அதே வேளையில், அறிவாற்றல் தேவைப்படும் பணிகளில் சாட் ஜிபிடியை அதிகம் பயன்படுத்துவது, சிந்தனையை மந்தமாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவிக்கிறார்.

முழுமையாக நம்ப வேண்டாம்

இத்தகைய சூழலில்தன் OpenAI தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், ChatGPT பயனார்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். The ChatGPT Podcastல் பேசிய சாம் ஆல்ட்மேன், சாட் ஜிடிபி மீதான மக்களின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளையில் இது வெறும் தொழில்நுட்பம்தான் என்பதால் முழுமையாக நம்பத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சாட் ஜிபிடி முடிந்தவரை செயல்படும் என்றும் சாம் ஆல்ட்மேன் உறுதியளித்துள்ளார். ChatGPT என்பதைத் தாண்டி AI பயன்பாடு என்று எடுத்துக்கொள்ளும்போது சாம் ஆல்ட்மேன்க்கு முன்பே பலரும் இதுதொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.

CHAT GPT, DEEP SEEK

சாம் ஆல்ட்மேனின் இந்தக் கருத்துகள் ChatGPTயின் பயனாளர்களிடையே விவாதத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. AI தொழில்நுட்பத்தில் இருக்கும் சில குறைபாடுகளை ஒப்புக்கொள்ளும் சாம் ஆல்ட்மேன், இது மிகவும் நம்பகத்தனமானது அல்ல என்றும் தெரிவிக்கிறார். சாட் ஜிபிடி தொடர்பாக சாம் ஆல்ட்மேனின் கருத்து சாதரணமாக புறந்தள்ளக்கூடியது அல்ல. ஏனெனில், சாட் ஜிபிடி எனும் அசுரன் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களைப் பெற்ற ஒன்று.

புயல் வேகத்தில் பயனர்கள்

இதை இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டுமானால், 2022 பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரத்திற்கு சாட் ஜிபிடியைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் ஆக இருந்தது. அதுவே 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரத்தில் சாட் ஜிபிடியைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. ChatGPT பயனாளர்களில் 64.32% பேர் ஆண்கள் என்றும், 35.68% பேர் பெண்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், 45%க்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Semrushன் மே 2025 அறிக்கையின்படி, உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைதளங்களில் ChatGPT ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக ChatGPTயின் அதிகமான பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிறது Semrush. மற்ற AI தொழில்நுட்பத்தின் பயனாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகின்றனர்.

Ai

இந்த இடத்தில்தான் சாம் ஆல்ட்மேனின் கருத்துகளையும், MIT ஆய்வறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. Netcraft வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, சில பிரபல இணைய சேவைகளுக்கு எப்படி உள்நுழையலாம் என்று AI-யிடம் கேட்டபோது, அது பரிந்துரைத்த இணையதள முகவரிகளில் மூன்றில் இரண்டு தவறானவையாக இருந்தது தெரியவந்திருக்கிறது. அதாவது, பல முறைகளில் AI, உண்மையான தளத்தைக் காட்டாமல், தவறான அல்லது ஆபத்தான தள முகவரிகளைக் காட்டியிருக்கிறது.

ஆய்வுகள் தரும் முடிவுகள்

Netcraft தரவுகளின்படி, 50 பிரபலமான நிறுவனங்களுக்கான login தொடர்பான கேள்விகளைக் கேட்டால், 131 சமூக வலைதள முகவரிகளைப் பரிந்துரைத்திருக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட முகவரிகளில் 29% தளங்கள் பதிவு செய்யப்படாதவை அல்லது செயலிலில்லாதவை. மேலும் 5% தளங்கள் முற்றிலும் வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான செயலிலுள்ள தளங்கள். இதன் காரணமாக போலியான தளங்களை நாம் பயன்படுத்தும்போது நம் தரவுகள் திருடப்பட வாய்ப்பிருக்கின்றன.

AI ஒரு விஷயத்தை பரிந்துரைக்கும்போது அதை பயன்படுத்துபவர்கள் அப்படியே நம்பக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, AI பயன்படுத்தும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை. மிக முக்கியமாக மூளையை நம்பி, AIக்கு செல்வதை இரண்டாம் பட்சமாக வைத்திருப்பது நல்லது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.