அகமதாபாத் விமான விபத்து | நிகழ்ந்தது எப்படி? கிடைத்த வலுவூட்டும் ஆதாயம்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியும் ஏஏஐபி வசம் உள்ளது.
இடையில் அதில் இருக்கும் டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அதை மறுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை, ஜூலை 11ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த ஃப்ளைட் சிமிலேட்டர் (Flight Simulator) சோதனையில், விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தின் சூழலையும் விமான அமைப்புகளையும் பாவனையாக உருவாக்கி ஆராய்வதே ஃப்ளைட் சிமிலேட்டர் சோதனை எனப்படுகிறது.
ஜூன் 12 அன்று அகமதாபாதில் விபத்துக்குள்ளான போயிங் 777 விமானத்தில் சிமுலேட்டர் சோதனையில் விமானத்தின் அமைப்புகள் மட்டும் விபத்துக்குக் காரணம் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவசரகால பவர் டர்பைன் செயல்பட்டது மற்றும் லேண்டிங் கியரின் நிலை போன்ற கூடுதல் தடயங்கள், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்ற கருதுகோளுக்கு வலு சேர்க்கின்றன. அகமதாபாத் விமான விபத்து குறித்த அதிகாரபூர்வ ஆய்வுகள் நடைபெற்றும் வரும் நிலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் விரைவில் முழுமையாகக் கண்டறியப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.