Parandur Air Port project New Airport For Chennai
தமிழ்நாடு

ரத்து செய்யப்படுமா பரந்தூர் திட்டம்? சென்னையின் புதிய விமான முனையம் எது? புதிய அரசுக்கு சிக்கல்!

பரந்தூருக்கு பதிலாக புதிய இடத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவது புதிய அரசுக்கு சவாலாகவே இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

Praveen Joshva L

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 2028-2030க்குள் கொள்ளளவு உச்சத்தை எட்டும் நிலையில், நகர வளர்ச்சிக்காக இரண்டாவது விமான நிலையம் அவசியமாகியுள்ளது. அதிமுக, திமுக ஆட்சிகளில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அழிவுக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை விமான நிலையம் இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு சுமார் 2.2 கோடி பயணிகளைக் கையாளும் நிலையில், இது வரும் 2028-2030 காலகட்டத்திற்குள் தனது உச்சகட்ட கொள்ளளவை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புதிதாக எந்த சேவையையும் தொடங்கமுடியாத நிலை ஏற்படும். மேலும் இந்த விமான நிலையம் தற்போது நகரின் மையப்பகுதியில் உள்ளதால் அதனை விரிவுபடுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது சென்னையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் புதிதாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலேயே சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு இடங்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய நான்கு இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பரந்தூர் தகுதியான இடமாக அதிமுக அரசால் பரிசீலிக்கப்பட்டது.

அதன் பின்னர் திமுக ஆட்சியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஆனால் இந்த பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர். விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் சுமார் 1,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நீர்நிலைகள் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அதாவது கடந்த 2025-ம் ஆண்டு அப்போது புதிதாக கட்சி தொடங்கியிருந்த நடிகர் விஜய் போராட்டக்குழு பிரதிநிதிகளை சந்தித்து பேசியதோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தினார்.

இந்த நிலையில், தற்போது விஜயின் தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் சென்னையின் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான முனையம் அவசியமாக இருக்கும் நிலையில், அரசு மாற்றுத்திட்டமாக எந்த இடத்தை தேர்வு செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பிற இடங்களை விட பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்கள் குறைவு என்பதாலேயே இது தேர்வு செய்யப்பட்டதாகவும், இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த அரசு இடங்களும் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டே பரந்தூர் விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஏற்கனவே 1,322 ஏக்கர் அரசு நிலங்கள் விமான நிலையத் திட்டத்திற்காக மாற்றப்பட்டுவிட்டன. அதே போல குறிப்பிடத்தக்க அளவில் தனியார் நிலங்களும் கையப்படுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவது புதிய அரசுக்கு சவாலாகவே இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.