பெரம்பூரைத் தேர்வுசெய்துள்ள விஜய், தென்மாவட்டங்களிலும், காவிரி படுகை பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி கிழக்கைத் தேர்வு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலின் மையப்புள்ளி என்று வர்ணிக்கப்படும் திருச்சியில், இந்த முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சூடுபிடித்திருக்கிறது. இதற்குக் காரணம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதிகளில் ஒன்று திருச்சி கிழக்கு. தலைநகர் சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்த சென்னை பெரம்பூரைத் தேர்வுசெய்துள்ள விஜய், தென்மாவட்டங்களிலும், காவிரி படுகை பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி கிழக்கைத் தேர்வு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
"திருச்சியில் தொடங்கினால் திருப்பம் ஏற்படும்" என்பது தமிழக அரசியலில் எழுதப்படாத விதி. அந்த நம்பிக்கையோடுதான் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியிலிருந்து விஜய் தொடங்கினார். விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனையின் பேரில், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வணிகர்களின் கூடாரமாகக் கருதப்படும் இந்த தொகுதியில், 2 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் 11 விழுக்காடு, கிறிஸ்தவர்கள் 10.5 விழுக்காடு என சிறுபான்மையினரின் வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. வெள்ளாளர், பட்டியலினத்தவர், முக்குலத்தோர் எனப் பல சமூகத்தினரின் வாக்கு வங்கியும் உள்ளது. கிராமப்புறங்கள் இல்லாத முழுமையான சிறிய நகரத் தொகுதி என்பதால், தேர்தல் பணிகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பது தவெகவின் கணக்கு. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2011ஆம் ஆண்டு உருவான இந்த தொகுதியில், அதிமுக 2 முறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வென்றுள்ளது.
2011 தேர்தலில் அதிமுகவின் மனோகரன், 2016 தேர்தலில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெற்றி பெற்றனர். கடந்த 2021 தேர்தலில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ், சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக சார்பில் மீண்டும் இனிகோ இருதயராஜே களமிறங்க உள்ளார். அதிமுக சார்பில் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் களமிறங்க உள்ளதால், திருச்சி கிழக்கில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.