திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு, கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “அருமைத் தோழர்களே, மாநாடு வெற்றி பெற்றுவிட்டது, மாநாடு வெற்றி பெற்றுவிட்டது, மாபெரும் வெற்றி, மகத்தான வெற்றி” என முழங்கினார்.
மாநாட்டுத் திடலில் குழுமி இருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். தமிழ்நாடே திரும்பிப் பார்த்தது. ஆம், மாநாடு மகத்தான வெற்றித்தான். மாநாட்டின் திட்டமிடலுக்குப் பின் இருந்தவர் விசிக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜுனாவும் அவரது வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும்...
2011 ஆம் ஆண்டு முதலே திமுகவிற்கு பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா, 2021 தேர்தல் வெற்றிக்குப் பின் VOICE OF COMMONS எனும் தேர்தல் வியூக நிறுவனத்தைத் தொடங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக பணியாற்றி வந்தார். அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அரசியல் விவாதங்களாக மாறின.. இந்த கட்டுரையில் அதையும் பார்க்கலாம்.. ஆனால், முதலில் நாம் பார்க்கப்போவது யார் இந்த ஆதவ் அர்ஜுனா?
திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர் ஆதவ் அர்ஜுனா. பின்தங்கிய பொருளாதாரப் பின்புலம் கொண்ட எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆதவ் அர்ஜுனா. சிறுவயதிலேயே பெற்றோரையும் இழந்தவர். சமீபத்தில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில், ஐந்து வயதில் எனது தாயின் தற்கொலையை கண்முன்னே பார்த்தவன் என தனது தாயின் மறைவு குறித்தும் ஆதவ் பேசி இருந்தார்.
தாயின் இழப்பு, தனிமை இவையே தன்னை நூலகங்களை செல்லவைத்தாக கூறும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கூடைப்பந்தாட்டத்தில் அதிகளவு ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள விளையாட்டு மேம்மாட்டு ஆணைய விடுதியில் உதவித்தொகையுடன் தங்கிப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அரசியல் மீதான ஈடுபாடு காரணமாக பொலிடிக்கல் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளை திருமணம் செய்திருக்கும் ஆதவ் அர்ஜுனாவிற்கு மார்ட்டின் வழியாகவே திமுக தலைமைக்கு நெருக்கமேற்படுகிறது. இதனை அடுத்து 2011-2016 காலகட்டத்தில், ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணத்திட்டத்தை செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவரானார். 2016 தேர்தலில், வியூக வகுப்பாளரான சுனிலுடன் இணைந்து திமுகவிற்காக பணியாற்றிய நிலையில், 2019 ஆம் ஆண்டு one mind India எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். பின், 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுகவிற்கு பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டுத் தேர்தலில், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் மாஸ்டரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவுக்காக பணியாற்றினார்.
2016, 2019, 2021 தேர்தல்களை மூன்று யுத்தங்கள் எனக் கூறும் ஆதவ், மதப்பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக தேர்தலில் பங்கெடுத்ததாக தன்னை எப்போதும் முன்னிறுத்தி வருகிறார்.
பின்னர், திமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகிய அவர், தனது தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். one mind India எனும் நிறுவனம் VOICE OF COMMONS FOUNDATION எனும் தேர்தல் வியூக நிறுவனமாக உருமாற்றம் கொள்கிறது.
சமூக ஊடக உலகில், தேசிய அளவில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை முதலில் உணர்ந்து கொண்டது பாஜகதான். பின் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது செல்வாக்கிற்கு ஏற்ப வியூக வகுப்பாளர்களை நியமித்து தேர்தல்களைச் சந்தித்து வந்தது. தமிழகத்திலும் இதேநிலைதான் இருந்தது. பொருளாதார ரீதியாகவும், கட்சி கட்டமைப்பு ரீதியாகவும் பெரிய அளவில் இருந்த கட்சிகள் தங்களுக்கு ஏற்ப வியூக அமைப்பாளரை நியமித்து செயல்பட்டு வந்தது. சிறிய கட்சிகள் தாங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வியூகங்களை வகுப்பது என்றால் வேறொன்றுமில்லை. கொள்கைகளை, தலைவர்களது பேச்சுகளை மக்களது மத்தியில் கொண்டு செல்லும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் செய்யும் சிறு தவறுக்காக காத்திருந்து அதையும் மக்களது கவனத்திற்கு கொண்டு செல்வது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஏற்ப, வேட்பாளர்களது தேர்வு முதல் அத்தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து அவரது தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தயாரிப்பது வரை தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனங்களே மேற்கொள்ளும். மேலும், நமக்கு நாமே, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி, வேண்டும் மோடி வேண்டும் மோடி போன்று மக்களுக்கு எளிதியில் பதியில் முழக்கங்களை உருவாக்கி அதனடிப்படையில் பணியை மேற்கொள்வது என்பதையும் சொல்லலாம்.
மொத்தமாக, தலைவர்களது உரைகளுக்கு குறிப்புகளையும், அவர்கள் பேசப்போகும் தொகுதிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஞாபகப்படுத்துவது; போட்டியிடும் தொகுதிகளில் இருக்கும் மக்கள் தொகை, வாக்களிப்பவர்களில் அதிகம் இருப்பது இளைஞர்களா, பெண்களா என்பதை எல்லாம் கவனித்து அவர்களுக்கு ஏற்ப வாக்குறுதிகளை கட்சித் தலைவர்களுக்கு உருவாக்கித் தருவது போன்ற பணிகளைச் சொல்லலாம். தலைவர்களை மக்களது மத்தியில் கொண்டு செல்வது என்பதுதான் தேர்தல் வியூக நிறுவனங்களில் பணி.
பெரிய கட்சிகள் எல்லாம் வியூக வகுப்பாளர்கள் உதவியுடன் தேர்தலைச் சந்தித்த நிலையில், வியூக வகுப்பாளர் ஏதும் இல்லாமல் தேர்தலைச் சந்தித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, திருமாவளவன், அவரது கொள்கைகள், அவரது கட்சி மேல் மக்களது மேல் இருந்த ஒற்றை நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தல்களைச் சந்தித்து வந்தது. வி.சி.க-வின் கலை இலக்கிய அமைப்பான விடுதலைக் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயாராக இருப்பார்கள். தொகுதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே களத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குவார்கள். இத்தகைய சூழலில்தான் விசிகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுக்க அக்கட்சியுடன் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா.
விசிகவுக்கு தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியை டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் மீண்டும் கட்டமைத்ததாக ஒரு பார்வையும் உண்டு. பின்னர் திருச்சியில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். பின் அவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதி கட்சியில் இணைந்தவருக்கு, பிப்ரவரி 15 ஆம் தேதி பொதுச்செயலாளர் பதவியா என அப்போதே பேச்சுக்கள் எழுந்தன.
2024 தேர்தலுக்கு முன்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில், ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டது, ஆதவ் அர்ஜுனாவுக்குதான் என்கிற செய்திகளும் வெளியாகின. ஆனால், இரண்டு இடங்கள் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்க, அந்தத் தேர்தலில், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் மட்டும் இந்த நிறுவனம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டது. விசிக டிஜிட்டல் வடிவ பரப்புரைகளில் முன்னணியில் நிற்க வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் முக்கிய காரணமாக அமைந்தது.
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், பிரபல தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை” எனப் பேசியது, கூட்டணிக்குள் மட்டுமல்லாது விசிகவுக்குள்ளும் அனலைக் கிளப்பியது.
அவர் மீது வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டு திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியில் இருந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவே கருத்துகளை தெரிவிக்கிறார் என்பது. சமீபத்தில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் கூட, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியது திமுகவிற்கு எதிரானதாகவே இருந்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் நபராக மாறிப்போனார் ஆதவ் அர்ஜுனா. அவர் மீது விசிக தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருதரப்பு, ‘என்ன தவறு செய்தார், ஏன் நடவடிக்கை’ என கேட்கும் மறு தரப்பு என கிட்டத்தட்ட தலைப்புச் செய்தியாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைமை அறிவித்தது.
இதனை அடுத்து அறிக்கை வெளியிட்ட ஆதவ் அர்ஜூனாவோ, “எனது சிறுவயதில் இருந்து ஏமாற்றம், இழப்புகள், எனக் காலம் எனக்குத் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்” எனத் தெரிவித்து ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் வருங்கால சமூகத்தை அரசியல் மயமாக்கி தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் இயக்காம மாற உள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர்,
“ ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
‘பிரசாந்த் கிஷோர் வழியைப் பின்பற்றுகிறாரா ஆதவ்?’ என்ற ஒரு பார்வையும் உண்டு. ஏனெனில், பிரசாந்த் கிஷோர் 2012 ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது, மோடியின் தலைமை தேர்தல் வியூக வகுப்பாளராக மாறினார். தொடர்ந்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட அப்போதும் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் தேவைப்பட்டன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை இந்திய அளவில் கொண்டு சேர்த்ததில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு மிக அதிகம். அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. அதன் பின்னர் பாஜக தலைமைக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பாஜகவை தோற்கடிப்பதே லட்சியம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஐபேக் என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கினார் கிஷோர். பின், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பணியாற்றிய அவருக்கு, ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக 2020-ம் ஆண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர். சமீபத்தில் ஜன் சுராஜ் கட்சியையும் தொடங்கினார். இதே பாணியில் மாநில அரசியல் அளவில் ஆதவ் அர்ஜுனா பல பணிகளை செய்துவருவதால், பிரசாந்த் கிஷோரை பின் தொடர்ந்தே செயல்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா என்ற கேள்வியும் யூகங்களும் எழுந்துள்ளன.
எது எப்படி இருந்தாலும், விசிக - திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா சுற்றி ஏகப்பட்ட யூகங்களும், விவாதங்களும் சுற்றி வருகின்றன என்பது மட்டும் நிதர்சனம். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.