இந்திய அரசியலில் கட்சிகளின் வெற்றிக்கு தேர்தல் சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னங்கள் கட்சிகளின் நிலையை நிர்ணயிக்கின்றன. நிரந்தர சின்னம் பெற கட்சிகள் 6% வாக்குகள் அல்லது 2 இடங்களை வென்றிருக்க வேண்டும். விஜய் தலைமையிலான தவெக கட்சி 'விசில்' சின்னத்தை நிரந்தரமாக்க பல்வேறு விதிமுறைகளை பின்பற்றவேண்டும்.
இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சியின் வெற்றிக்கு அதன் பெயர், தலைவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு, ஏன் சில நேரங்களில் அதை விட அதிகமாகவே அந்த கட்சியின் தேர்தல் சின்னத்துக்கும் பெரிய பங்கு இருக்கிறது.
இதன் காரணமாகவே அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடக்கூடிய சின்னத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமே சின்னங்களை வழங்கி வரும் நிலையில், அதில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும். அதில் தேசிய அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளுக்கு நாடு முழுவதும் நிரந்தர சின்னமும், மாநில கட்சிகளுக்கு அந்த மாநிலத்தில் நிரந்தர சின்னமும் ஒதுக்கப்படும்.
அதே போல நிரந்தர சின்னம் பெற்றுள்ள கட்சிகள், குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாமல் போனால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழப்பதோடு, அந்த கட்சியின் சின்னமும் பறிக்கப்படும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சி பல்வேறு இடங்களில் போட்டியிட விரும்பினால் அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் பொதுவான சின்னத்தை வழங்கும். இதற்கான விதிமுறைகள் தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-ன் கீழ் இடம்பெற்றுள்ளன.
விதிமுறையின் படி, ஒரு கட்சி பொதுச் சின்னத்தைப் பெற வேண்டுமானால், மாநிலத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 5% தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். அதே போல சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பில் இருந்தோ, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அல்லது வெளியான 3 நாட்களுக்குள்ளோ தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மூன்று சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து சமர்ப்பிக்கலாம். ஒரு வேளை ஒரே சின்னத்தை வேறு வேறு கட்சிகள் கோரினால், முதலில் விண்ணப்பித்த கட்சிக்கு முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். அல்லது அந்த சின்னத்தை யாரும் கோராத நிலையில், விண்ணப்பித்த கட்சிக்கு அந்த சின்னம் வழங்கப்படும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனது பழைய சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை இழந்ததற்கு மற்றொரு கட்சி முன்னதாக வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பித்ததுதான் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி பொது சின்னத்தை பெற்றாலும், அந்த கட்சி போட்டியிடாத இடங்களில் அந்த சின்னம் வேறொரு சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்படலாம்.
பொது சின்னத்தை பெற்ற கட்சி சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்று, 2 சட்டமன்ற இடங்களை வென்றிருந்தாலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு இடங்களில் வென்றிருந்தாலோ அந்த கட்சிக்கு மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டு நிரந்தர சின்னம் வழங்கப்படும்.
அல்லது சட்டமன்றத் தேர்தலில் மொத்த இடங்களில் குறைந்தது 3 சதவீத இடங்களையோ, சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளையோ பெற்றிருந்தால் அந்தக் கட்சிக்கு நிரந்தர சின்னம் வழங்கப்படும். இது தவிர நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு உறுப்பினர் என்ற விகிதத்தில் வென்றிருந்தால் அந்த கட்சிக்கும் நிரந்த சின்னம் வழங்கப்படும். இந்த வகையில்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியும், தனி சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றன.
நிரந்தர சின்னம் பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளும் வழங்கப்படும். தேர்தலில் வேட்பாளராக நிற்க சுயேச்சை அல்லது அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒருவர் முன்மொழிந்தாலே அவரது வேட்புமனு அங்கீகரிக்கப்படும்.
அதே போல, அவர்களுக்கு வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள் இலவசமாகப் வழங்கப்படும். மேலும் பிரச்சாரத்திற்கு 40 நட்சத்திர பேச்சாளர்களை நியமனம் செய்யும் அனுமதியும் வழங்கப்படும்.
ஒரு முறை தேர்தல் ஆணையத்தின் இந்த அங்கீகாரத்தை பெற்ற பின்னர் தொடர்ந்து வரும் இரண்டு தேர்தல்களில் இந்தத் தகுதிகளைத் தக்கவைக்கத் தவறினால், அந்தக் கட்சியின் அங்கீகாரம் மற்றும் நிரந்தரச் சின்னம் பறிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.