செய்தியாளர்: நவீன்குமார்
சென்னை ஆவடியை அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கிச் செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி நேற்றும் வழக்கம் போல் பயணிகள் அரக்கோணம் மார்க்கமாக செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்பொழுது ரயில் நிலையத்திற்கு போதையில் வந்த இளைஞர்கள் சிலர் நடைமேடையில் இருந்த இரும்பு ராடு, டியுப் லைட் உள்ளிட்டவற்றை பிடிங்கி நடைமேடையில் ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை சரமாரியாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இரும்பு கம்பியால் முதியவர் பரமசிவம் என்பவரை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயணிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.
மது போதையில் இருந்த இளைஞர்கள் பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தேடி வந்தனர்.
அதன்முடிவில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சுபாஷ், இப்ராஹிம் மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை ஆவடி ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மூவரை பிடிக்க ஆவடி ரயில்வே போலீசார் விரைந்துள்ளனர்.