தேனி | 55 வயது பெண் அரிவாளால் வெட்டிப் படுகொலை..
செய்தியாளர் : ரமேஷ் கண்ணன்
தேனி அருகே உள்ள உப்புகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனஜா (55), சுருளி (60) தம்பதியினர். இவர்கள் உப்புக்கோட்டை வடக்கு காலணி தெருவில் வசித்து வருகின்றனர். சுருளி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வனஜா வீட்டில் உடலில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் சென்ற தேனி வீரபாண்டி போலீஸார், வனஜாவின் உடலை மீட்டு உடற் கூராய்விற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வனஜா கொலை தொடர்பாக அவரது கணவர் சுருளியை வீரபாண்டி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வனஜா - சுருளி தம்பதியினருக்கு சுமதி, மல்லிகா என இரண்டு மகள்களும், கணேசன் என்ற ஒரு மகனும் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் திருமணமாகாத மகன் கணேசன் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.