சோழப் பேரரசன் கரிகாலன் காலத்திலேயே பெரும் செல்வாக்குடன் விளங்கியது விழுப்புரம்! பல்லவர் மற்றும் பாண்டியர்களின் ஆட்சிக்குப் பிறகு, 14-ஆம் நூற்றாண்டில் முகலாயர் மற்றும் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதி செழித்தோங்கியது. ஆங்கிலேய - பிரெஞ்சுப் போர்களுக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்த இது, 1993-ல் கடலூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. 2008-ல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, இன்றைய நவீன விழுப்புரத்தின் அரசியல் மற்றும் நிர்வாக அடையாளமாக மாறியுள்ளது.
முதலில் மாவட்டத்தின் மையமான விழுப்புரம் தொகுதியைப் பார்ப்போம். திமுக 9 முறை வென்ற இக்கோட்டையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் வசம் தொகுதி உள்ளது. அதேநேரம், 2011-ல் உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் கை ஓங்கியிருக்கிறது. அண்மையில் நடந்த இடைத்தேர்தல் வரை திமுக 3 முறை இங்கு வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. இருப்பினும், திண்டிவனம் மற்றும் வானூர் ஆகிய தனித் தொகுதிகளில் நிலைமை வேறாக உள்ளது. வானூர் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 5 தேர்தல்களாக அதிமுகவின் கோட்டையாகத் திகழ்கிறது.
திண்டிவனத்திலும் கடந்த 5 தேர்தல்களில் 4 முறை அதிமுகவே வாகை சூடியுள்ளது. அடுத்ததாக, சமூகக் கட்டமைப்பால் முக்கியத்துவம் பெறும் செஞ்சி மற்றும் மயிலம். அமைச்சர் கே.எஸ். மஸ்தான் பிரதிநிதித்துவப்படுத்தும் செஞ்சி தொகுதியில் திமுக 9 முறை வென்றுள்ளது என்றாலும், கடந்த 5 தேர்தல்களில் அதிமுக 4 முறை வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்துள்ளது. மயிலம் தொகுதியைப் பொறுத்தவரை பாமகவின் கோட்டையாக உருவெடுத்துள்ளது. 2.21 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இங்கு, வன்னியர் சமூக வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
இறுதியாக, மூத்த அரசியலர் பொன்முடி வசம் உள்ள திருக்கோவிலூரைப் பார்க்கலாம். இங்கு வன்னியர், பட்டியலினத்தவர் மற்றும் உடையார் சமூக வாக்குகளின் கலவை வெற்றியைத் தீர்மானிக்கிறது. 1977 முதல் 2006 வரை தொகுதி மறுசீரமைப்பில் விடுபட்டிருந்தாலும், கடந்த 5 தேர்தல்களில் திமுக 3 முறை இங்கு வென்றுள்ளது.