திருமாவளவன் - ஆதவ் அர்ஜூனா  புதிய தலைமுறை
தமிழ்நாடு

“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது” - திருமாவளவன்

“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தலைமை கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதொடர்பான முடிவு விரைவில் வரும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்...

“தொடர் வெற்றியை தடுக்க திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி”

திருமாவளவன்

“விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் I.N.D.I.A. கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியை, கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்குள் உள்ள சதி திட்டமாக இருக்கும். அதிமுக, பாஜக ஆகியவை வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, I.N.D.I.A. கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளனர். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

“திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன்”

கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே அந்நிகழ்வில் நான் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். இப்படியான கருத்துகள், யுகங்களாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. மற்றபடி என் முடிவானது நான் சுயமாக எடுத்த முடிவு. விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு விஜய், திமுக அரசை முதன்மையான எதிரி என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், நானும், விஜயும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தால் கூட அதை அரசியலாக்குவார்கள். இதற்கான பலர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்றது மகிழ்ச்சி”

விஜய் மீது எனக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதும் மகிழ்ச்சி. சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள்; குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். துணை பொதுச் செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. அப்படி ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை.

“தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தலைவரின் கடமை”

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது உயர்நிலைக் குழு கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு ஒழுக்கமாக கொண்டுள்ளோம். இது முழுமையான அரசியல் கட்சி ஆவதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் நிறைவேற்றினோம். தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது கட்சித்தலைவராக என் கடமை.

விஜ்ய, திருமாவளவன்

“ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக உள்ளது”

ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். இதுதொடர்பான முடிவு விரைவில் வரும்.

எதை, எங்கே, எப்போது, எப்படி சொல்லவேண்டும் என்பதுதான் Strategy. நாம் ஒரு கூட்டணியில் இருக்கும்போது, அந்த கூட்டணிக்கு முரணாக பேசுவது நாகரிகமானது அல்ல. கூட்டணியை விட்டு வெளியே வந்து வேண்டுமானால் பேசலாம். இல்லையென்றால் கூட்டணிக்கு எது நல்லதோ அதையே பேச வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஆதவ் அர்ஜுனா, கட்சி நலனுக்காக பேசுகிறேன் என்ற தொணியில் பேசக்கூடாததை பேசக்கூடாத இடத்தில் பேசுகிறார். ஆகவே அவர்மீது நடவடிக்கை என்ன, நடவடிக்கை இருக்குமா என்பதுபற்றி விரைவில் அறிவிப்போம்.

என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழல் இல்லை. அது முடியாமல் தமாசுக்கு ஒரு அஜெண்டா கொடுத்திருக்கிறார்கள். அதன்படி சிலர் பேசுகிறார்கள்” என்று தெரிவித்தார்.