திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் பெண்களை தாழ்த்தி பேசவில்லை என்றும், குடும்பத்தில் மனைவி, மகள், தங்கை உள்ள நிலையில் தன்னை அப்படி வளர்க்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார். காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பாமல் டைவர்ட் செய்ய இந்த அரசு பொய் பரப்புரை, கட்-காப்பி-பேஸ்ட் செய்து கைதுக்கு முயன்றதாகவும், தன்னை பயமுறுத்த முடியாது என்றும், முதல்வரைப் போல ஓடுகாலி அல்ல எனவும் கடுமையாக தாக்கினார்.
காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தஞ்சை போலீஸார் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்த தஞ்சைக்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர், திமுகவினர் அதிகளவில் திரண்டதால் செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட 1 மணி நேரத்திற்கும் மேலான விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற உத்தரவின் படி உதயநிதி ஸ்டாலின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கைது விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எந்தவொரு தவறான எண்ணத்திலும் நேற்று நான் பேசவில்லை. பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என எண்ணம் எனக்கு துளியும் இல்லை
என்னுடைய பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; திருமணமாகி எனக்கு ஒரு மனைவி இருக்காங்க. அவங்க கூட தான் நான் இருக்கேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க. எனக்கு ஒரு தங்கை இருக்காங்க, எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது. நான் பேசாததை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய் பரப்புரை மேற்கொள்கின்றனர். இந்த கைதுக்கு நான் பயப்பட மாட்டேன், இன்னும் 100 முறை பேசுவேன், மீண்டும் பேசுவேன்.
3,000 காவலர்கள் பாதுகாப்புடன் பயங்கரவாதியைப் போல் சாலை மார்க்கமாக அழைத்துச் சென்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது; இதற்கு நான் அஞ்சவில்லை.
கரூரில் 41 பேரை பலி கொடுத்த பின் இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடியவர் இன்றைய முதல்வர். சென்னை விமான நிலையத்திலும் யாரையும் சந்திக்காமல் வீட்டில் முடங்கிக் கிடந்தவர் முதல்வர்; நான் முதல்வரைப் போல ஓடுகாலி அல்ல. இந்த ஆட்சியை சர்கஸ் கூடாரம் போலத்தான் பார்க்கிறேன்” என கடுமையாக பேசினார்.