விஜய் X
தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதி அமல் | ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சந்திப்பு.. ஆதவ் அர்ஜுனா பதிவு!

டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே - 4 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இந்த சூழலில் தான், தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. இத்தேர்தல், மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதற்கு முக்கியக் காரணம் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். அவரால், ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் தொடர்ந்து அக்கட்சியின் பரப்புரை மேடைகளில் இத்தேர்தலில், திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என தொடர்ந்து கூறி வரும் நிலையில், அரசியல் நோக்கர்களும் தவெக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனா

முன்னதாக, கரூர் துயரத்திற்குப் பிறகு மக்கள் சந்திப்புகளை நிறுத்திய தவெக. அவ்வப்போது, மாவட்டம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தான், தவெகவின் பரப்புரைக்கு திமுகவின் அழுத்தம் காரணமாக காவல்துறை அனுமதி தர மறுக்கிறது எனக் கூறி வரும் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை செல்லும். அப்போது, உரிய அனுமதி தவெகவுக்கு கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்த சூழலில் தான், தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. தேர்தல் நடத்தை முறைகளும் அமலுக்கு வந்திருக்கின்றன.

கரூர் துயரம் தொடர்பான 3-ம் கட்ட சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜரான நிலையில், 6 மணி நேர விசாரணைக்கு பிறகு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது, காரில் இருந்தபடி கையசைத்து வந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் தான், அந்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும். இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்” எனத் தெரிவிக்கபட்டுள்ளது.