தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள தவெக, தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்யவிருக்கிறது. அதன்படி, காங்கிரஸைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெகவைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டது. எனினும், மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும், அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு தவெக அரசு அழைப்பும் விடுத்தது.
அந்த வகையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி.விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தவெகவைச் சேர்ந்த சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி ஸ்ரீநாத், அவிநாசி எஸ்.கமலி, குமாரபாளையம் சி.விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ஆர்.வி.ரஞ்சித்குமார், கும்பகோணம் வினோத், திருவாடானை ராஜீவ், கடலூர் பி.ராஜ்குமார், அரக்கோணம் வி.காந்திராஜ், ஒட்டபிடாரம் பி.மதன் ராஜா, ராஜபாளையம் கே.ஜெகதீஸ்வரி, ஈரோடு கிழக்கு எம்.விஜய பாலாஜி, ராசிபுரம் டி.லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் ரமேஷ், வேளச்சேரி ஆர்.குமார், ஸ்ரீபெரும்புதூர் கே.தென்னரசு, கோவை வடக்கு வி.சம்பத் குமார், அறந்தாங்கி ஜே.முகமது ஃபர்வாஸ், ஆர்.கே.நகர் என்.மரிய வில்சன், கிணத்துக்கடவு கே.விக்னேஷ், தாம்பரம் சரத்குமார் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.