Martin family 3 members candidate
தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 3 வேட்பாளர்கள்... ஆனால் 3 கட்சி சார்பில் போட்டி : தேர்தல் அரசியலில் சுவாரசியம் !

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பெரிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Praveen Joshva L

கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாண்டியாகோ மார்ட்டின், பின்னர் கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்' (Future Gaming and Hotel Services) என்ற நிறுவனத்தை தொடங்கி, தற்போது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், இவரின் குடும்பம் கட்டுமானம், கல்வி நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் எனப் பல துறைகளில் பரவியுள்ளது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியதாக இவரின் பெயர் ஊடகங்களில் பிரபலமானது.

Leema Rose Martin

இந்த நிலையில், இவரின் குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் மூன்று முக்கிய கட்சிகள் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அரசியலிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வந்த நிலையில், சமீபத்தில் இவர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இவர் இணைந்த ஒரே மாதத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ட்டினின் மூத்த மகனான சார்லஸ் ஜோஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கி பின்னர் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இணைந்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகள் இவரின் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்த இரு தொகுதிகளிலும் இவரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதே போல மார்ட்டினின் மகளான டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா தற்போது தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக உருமாறியுள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் போன்ற பதவிகளில் இருந்த இவர், ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

Charles Martin

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சில சர்ச்சைகள் காரணமாக விசிகவில் இருந்து விலகிய அவர், நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

மிக விரைவில் அக்கட்சியின் முக்கிய முகமாக ஆதவ் அர்ஜுனா மாறிய நிலையில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில், தவெக சார்பில் சென்னையின் வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வேறு வேறு கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. .