நாடு முழுவதும் எட்டு வாரங்களுக்குள் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை துறை செயலாளர் சுப்பையன், இயக்குநர் கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தெரு நாய்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தவும், நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மாநில அளவில் மேற்கொள்ளவும், கால்நடை துறை செயலாளர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகர ஆணையர் குமரகுருபரன், பேரூராட்சி ஆணையர் பிரதீப்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். மோசமான உடல் நலம் பாதித்த நாய்களுக்கு, உரிய கால்நடை மருத்துவர்கள் மூலம் உள்ளாட்சி அனுமதி பெற்று கருணை கொலை செய்யும் நடைமுறை பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மனிதர்களை கடித்தால் உரிமையாளரே பொறுப்பு எனும் விழிப்புணர்வை பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது கவலைக்கிடம் எனவும், இதை தடுக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் மாநில அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் 4.5 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகவும் வளர்ப்பு நாய்கள் 4.5 லட்சம் என ஒன்பது லட்சம் நாய்கள் இருப்பதாக தமிழக அரசின் கால்நடை துறை தெரிவித்துள்ளது. எட்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.