சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா
சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா pt web
தமிழ்நாடு

‘ஈஷா மையம்.. தற்போதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர்’ - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை

PT WEB

செய்தியாளர் - முகேஷ்

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர், காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 2007ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மையத்திற்கும் அவர் வரவில்லை என்ற தகவலை என்னிடம் கூறினர்.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் 5 ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணையே நடத்தி வருகிறது. எனவே காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்” குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி “கடந்த 2016 முதல், ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி தள்ளிவைத்தனர்.