nepal flood x
தமிழ்நாடு

’அந்த கோர சம்பவம் இப்படித்தான் நடந்தது..’ நேபாளத்தில் உயிர்தப்பிய தமிழ்நாடு தம்பதி உருக்கம்!

இயற்கையின் அழகையும் கோரத்தையும் ஒரே இடத்தில் பார்த்தோம் என்று நேபாளத்தில் இருந்து உயிர் தப்பிய தம்பதியினர் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

PT WEB

நேபாள சுற்றுலா சென்ற சிதம்பரம் தம்பதி, இயற்கையின் அழகும் ஆக்ரோஷமும் ஒரே இடத்தில் எப்படி மாறிமாறி அரங்கேறின என்பதை உருக்கமாக பகிர்ந்துள்ளனர். 200-300 கிமீ வேகத்தில் கரும்புகை போல் வந்த பேரழிவில் வாகனங்கள், மரங்கள், பாறைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டதையும், இதுபோன்ற நிகழ்வை இதுவரை கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை என அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று உயிர் தப்பிவந்த தம்பதி, அந்த கோர சம்பவம் எப்படி நடந்தது, என்னெவெல்லாம் அரங்கேறியது என்ற தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறைக்கு பகிர்ந்தனர்.

இயற்கை அழகை ரசித்த இடமும் அதுதான், உயிர் பயத்தை ஏற்படுத்திய இடமும் அதுதான், இயற்கையின் ஆக்ரோஷத்தை பார்த்த இடமும் அதுதான் என அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 200 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் கரும்புகை போல் வந்த பேரழிவில் பஸ், லாரி, கார், மரம், பாறை என அனைத்தும் அடித்து செல்லப்பட்டதாகவும், அப்படி ஒரு நிகழ்வை இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை எனவும் அதிர்ச்சியுடன் கூறினர்.

Nepal Flood

இமிகிரேஷன் அலுவலகத்தை அடைய இன்னும் 15 கிலோமீட்டர் தான் இருந்ததாகவும், ஒருவேளை அங்கு சென்றிருந்தால் உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என்றும், கடவுளின் ஆசிர்வாதத்தால் நடுவில் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால் தப்பித்ததாகவும் தெரிவித்தனர்.

தாங்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் தப்பி ஓடியதை பார்த்து தாங்களும் அந்த வழியாக தப்பியதாகவும், பின்னர் அங்கிருந்த அதிரடிப்படை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும், அவர்கள் உணவு கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகவும் கூறினர்.

நேரில் பார்த்தது சிறு அளவு தான் என்றும், தொலைக்காட்சியில் பார்க்கும்போது எவ்வளவு மோசமான இடத்தில் இருந்து தப்பி வந்தோம் என்பதை உணர்ந்ததாகவும் அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

இதனிடையே உயிர் தப்பி வந்த தம்பதியை சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.