தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில், ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் இருந்த சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
234 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 5.67 கோடி வாக்களர்கள் தங்கள் ஜனநாயகக் கடைமையை ஆற்றவுள்ளனர் எனவும் தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரித்தார். தொடர்ந்து, இத்தேர்தலை நடத்துவதற்காக, ரூ.1,302 கோடி தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 20,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழகத்தில் பறக்கும் படையினரின் கண்காணிப்பில், 170 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 1212 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், மதுபானங்கள் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் ₹ 495 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில் திருப்பியளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் தான், தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகளின் பரப்புரைகள், தலைவர்களின் சாலை வலம், வாக்கு சேகரிப்பு என தேர்தல் திருவிழா களைகட்டி வந்த நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்திருக்கிறது.
இந்தநிலையில் தான், மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
அதன்படி, தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.