தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேர வேலை தொடர்பான சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்
இதனை அடுத்து சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதையடுத்து வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு வழக்குகளை ரத்து செய்ததுடன் மற்ற இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக சிவி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், “நான் நேரடியாக முதல்வரை விமர்சிக்கவில்லை. தமிழ்நாடு அரசை மட்டுமே விமர்சித்துள்ளேன். அதில் தவறொன்றும் இல்லை. என்மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த அவதூறு வழக்குகளை அரசு பதிவு செய்துள்ளது. எனவே இரு வழக்குகளில் விசாரணை எதிர்கொள்ள உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, என்மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், சிவி.சண்முகம் பயன்படுத்திய வார்த்தைகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில்,
“மாநில முதல்வருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அநாகரிமாக பேசுவதா? இந்த செயல்பாட்டால் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக் கூடாது? முதல்வரை தரம் தாழ்த்தி பேசும் போது அவதூறு வழக்கு பதியப்படுவது இயல்புதானே! எனவே அந்த வழக்கை சி.வி.சண்முகம் சந்திக்கட்டும்” என்று காட்டமாக தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும். குறிப்பாக அரசியலில் விமர்சனம் செய்வது என்பது இயல்பான ஒன்றாகும். ஒரு தவறான விஷயத்தை அரசு செய்யும் போது, அதனை எதிர்கட்சியின் பிரதான தலைவர் என்ற முறையில் விமர்சிப்பது அவர்களது உரிமையாகும். இப்படி நடக்கும் ஒவ்வோரு நிகழ்வுக்கும் அவதூறு வழக்கு பதிவது என்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, “சி.வி.சண்முகத்திற்கு எதிராக மொத்தம் நான்கு எப்.ஐ.ஆர்கள் இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு மாநிலத்தின் முதல்வரை ஒருமையில் பேசுவது, தவறான வார்த்தைகளை உபயோகிப்பது ஆகியவை அனைத்தும் அவதூறுதான். அதனடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதுவரையில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பும் ஒரு சிறிய குறிப்பாக வழக்கின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.